பல வருடங்களுக்குப் பின் மீண்டு வரும் காதலி- இது என்ன மாயம்
சென்னை: கும்கி திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் விக்ரம் பிரபு. தொடர்ந்து இவன் வேற மாதிரி, அரிமா நம்பி போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளியான வெள்ளக்கார துரை படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை, தற்போது இயக்குநர் ஏ.எல்.விஜயின் இயக்கத்தில் இது என்ன மாயம் திரைப்படத்தில் நடித்து இருக்கிறார்.
அறிமுக நடிகை கீர்த்தி சுரேஷுடன் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கும் விக்ரம் பிரபு படத்தைப் பற்றி கூறும்போது "என்னுடன் இதுவரை நடித்த நடிகைகளில் நடிகை லட்சுமி மேனனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

வித்தியாசமான கதைகளில் நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் நான் ஒவ்வொரு படத்தையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்கிறேன். இது என்ன மாயம் திரைப்படமும் அந்த வகையைச் சேர்ந்ததுதான்.
காதல் + காமெடி என்று எல்லாம் கலந்த கலவையாக இது என்ன மாயம் திரைப்படம் இருக்கும், இயக்குநர் ஏ.எல்.விஜய் இயல்பாக நடிக்க வேண்டும் என்று எதிர்பார்த்து அதனையே படத்திலும் கொண்டு வந்திருக்கிறார்.
மொத்தத்தில் இது என்ன மாயம் திரைப்படம் அனைவரும் ரசிக்கும்படி இருக்கும் " என்று கூறியிருக்கிறார்.
ஒரு இளைஞனின் வாழ்க்கையில் பல வருடங்களுக்குப்பின் அவனது காதலி மீண்டும் வந்தால், எப்படி இருக்கும் என்பதுதான் இது என்ன மாயம் படத்தின் கதையாம்.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை மேஜிக் பிரேம்ஸ் சார்பில் நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோர் இணைந்து தயாரித்து உள்ளனர்.


Click it and Unblock the Notifications











