பொன்னியின் செல்வன் மேடையில் தனி ஒருவன் செகண்ட் பார்ட் அப்டேட் கொடுத்த ஜெயம் ரவி
சென்னை: மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவி ராஜராஜ சோழனாக நடித்துள்ளார்.
மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வரும் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய ஜெயம் ரவி, தனி ஒருவன் 2ம் பாகம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி
மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' வரும் 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தப் படத்தில் அருள்மொழி வர்மன் என்ற ராஜராஜ சோழன் கேரக்டரில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இதுவரை மணிரத்னம் இயக்கத்தில் நடித்திராத ஜெயம் ரவி, முதன்முதலாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் ரிலீஸை முன்னிட்டு, சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

ஜெயம் ரவியின் விசித்திரமான ஆசை
பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவியின் கேரக்டர் ரொம்பவே முக்கியமானது. படத்தின் மொத்த கதையும் அவரது பாத்திரத்தை சுற்றியே நகரும் என்பதால், ஜெயம் ரவிக்கு இந்தப் படம் பெரிய கம்பேக் கொடுக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக த்ரிஷாவுடன் ஜோடியாக நடித்துள்ள ஜெயம் ரவி, இந்தப் படத்தில் அவருக்கு தம்பியாக நடித்துள்ளதும் ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும். இந்நிலையில், பொன்னியின் செல்வனில் நடித்த தனது அனுபவங்கள் பற்றி பேசிய ஜெயம் ரவி, "எனக்கு இயல்பாகவே சுருட்டை முடி, இப்படத்திற்காக நீளமாக வளர்க்க வேண்டும். இனிமேல் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காது என்பதால், அதை ஸ்லோ மோஷனில் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன்" எனக் கூறினார்.

தனி ஒருவன் இரண்டாம் பாகம்
தொடர்ந்து பேசிய ஜெயம் ரவி, "பொன்னியின் செல்வனுக்குப் பிறகு இதைவிட சிறப்பா என்ன பண்ணப் போற என அண்ணன் மோகன் ராஜா கேட்டார். நான் அதற்கு தனி ஒருவன் 2ம் பாகத்தை நீ டைரக்ட் பண்ணு என்றேன். எனக்கும் அதுதான் தோன்றியது, நானே இதுபற்றி மணி சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் இதைவிட சிறப்பாக ஒன்றை செய்வாய் எனக் கூறினார். ஆனாலும், பொன்னியின் செல்வன் போல ஒரு படம் பண்ண முடியுமா எனத் தெரியவில்லை. இந்தப் படத்தில் கற்றுக்கொண்ட அனுபவங்களை வைத்து இனி எது செய்தாலும் சிறப்பாக செய்ய முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது" எனக் கூறினார்.

மோகன் ராஜா பதில் என்ன?
2015ம் ஆண்டு வெளியான 'தனி ஒருவன்' படத்தை ஜெயம் ரவியின் அண்ணன், மோகன் ராஜா இயக்கியிருந்தார். ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தப் படம், 100 கோடிக்கும் மேல் வசூலித்து கோலிவுட்டையே அதிர வைத்தது. அரவிந்த் சாமியின் ஸ்மார்ட்டான வில்லத்தனம், அவருக்கு மீண்டும் கம்பேக் கொடுத்தது. இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங்கில் இருக்கும் நிலையில், தற்போது ஜெயம் ரவியும் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநர் மோகன் ராஜா தான் என்ன பதில் சொல்வார் என தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











