லோகேஷுடன் எடுத்துகொண்ட போட்டோ... தளபதி 67ல் நடிக்கிறாரா..?: ஜெயம் ரவி சொன்ன ஷாக்கிங் அப்டேட்
சென்னை: பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ராஜராஜ சோழனாக நடித்து பிரமிக்க வைத்திருந்தார் ஜெயம் ரவி.
அகிலன், இறைவன் என அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் ஜெயம் ரவி, திரையுலகில் 19 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களாக லோகேஷ் கனகராஜுடன் ஜெயம் ரவி எடுத்துக்கொண்ட போட்டோ வைரலானது.
இதனால் தளபதி 67 படத்தில் விஜய்யுடன் ஜெயம் ரவி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

ராஜராஜ சோழன் ஜெயம் ரவி
2003ம் ஆண்டு வெளியான 'ஜெயம்' திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான ஜெயம் ரவி, 19 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். எம் குமரன், உனக்கும் எனக்கும், பேராண்மை, தனி ஒருவன் என கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஜெயம் ரவி, இறுதியாக பொன்னியின் செல்வன் படத்தில் நடித்திருந்தார். கடந்தாண்டு வெளியான இந்தப் படத்தில் அவரது ராஜராஜ சோழன் பாத்திரமும், அதற்கேற்ற அவரது நடிப்பும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து இந்தாண்டு பொன்னியின் செல்வன் 2ம் பாகமும் வெளியாகவுள்ளது.

லோகேஷுடன் ஜெயம் ரவி
பொன்னியின் செல்வனை தொடர்ந்து மேலும் சில படங்களில் கமிட் ஆகியுள்ள ஜெயம் ரவி, விரைவில் தனி ஒருவன் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். இதனிடையே இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் ஜெயம் ரவி எடுத்துக்கொண்ட போட்டோ ஒன்று சில தினங்களாக வைரலாகி வந்தது. இதனால் லோகேஷ் தற்போது இயக்கி வரும் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஜெயம்ரவி சொன்ன விளக்கம்
இந்நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்துள்ள ஜெயம் ரவி, தளபதி 67, லோகேஷுடன் கூட்டணி குறித்து மனம் திறந்துள்ளார். அதில், லோகேஷ் கனகராஜுடன் ஜெயம் ரவி இருக்கும் போட்டோ பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயம் ரவி, லோகேஷை சந்தித்தது உண்மை தான், அப்போது அவர் எனக்கு ஒரு கதையும் சொன்னார், ஆனால் இப்போதைக்கு அதைப் பற்றி சொல்ல முடியாது என்றுள்ளார். அதேநேரம் அது தளபதி 67 கதை இல்லை என்றும் ஜெயம் ரவி கூறியதாக தெரிகிறது. இதனால், இந்தக் கூட்டணி பற்றி வெளியான தகவல்கள் இதுவரை உறுதியாகவில்லை.

தொடங்கியது தள்பதி 67?
அதேநேரம் தளபதி 67ல் ஜெயம் ரவி நடிப்பதாக இருந்தாலும், அதுபற்றி படக்குழு சஸ்பென்ஸாக வைத்திருக்க வாய்ப்புள்ளது எனவும் சொல்லப்படுகிறது. விக்ரம் படத்தில் சூர்யா நடித்தது இறுதியாக தான் தெரியவந்தது. எனவே எப்போது வேண்டுமானாலும் சர்ப்ரைஸ் அப்டேட் கிடைக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே விஜய் - லோகேஷ் கூட்டணியில் தளபதி 67 ஷூட்டிங் சென்னையில் தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. தளபதி 67 திரைபடம் லோகேஷின் சினிமாட்டிக் யுனிவர்ஸாக இருக்கும் எனவும், இதில் கமல்ஹாசன், சூர்யா, கார்த்தி ஆகியோரும் கேமியோ ரோலில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இப்போதைக்கு கெளதம் மேனன், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லனாக நடிப்பது மட்டுமே உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. வாரிசு வரும் 11ம் தேதி ரிலீஸாகவுள்ளதால் அதன்பின்னர் தளபதி 67 அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











