மீண்டும் இணையும் 'தனி ஒருவன்'கள்
சென்னை: தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர் ஜெயம் ரவியுடன் இணைந்து மீண்டும் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
தமிழ் சினிமாவின் ரொமாண்டிக் ஹீரோக்களில் ஒருவரான அரவிந்த் சாமி நீண்ட வருடங்கள் கழித்து தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குத் திரும்பினார்.
தனி ஒருவன் படம் இந்த வருடத்தின் மாபெரும் வெற்றிப்படமாக மாறிய நிலையில் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து அரவிந்த் சாமி நடிக்கப் போகிறதாக கூறுகின்றனர்.

அரவிந்த் சாமி
தளபதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அரவிந்த் சாமி தொடர்ந்து ரோஜா, பம்பாய், இந்திரா மற்றும் மின்சாரக் கனவு போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு நிலையான இடத்தைப் பிடித்தார். அரவிந்த் சாமியின் நடிப்பை விட அவரது தோற்றத்தில் மயங்கிய இளம்பெண்கள் அரவிந்த் சாமியைப் போல மாப்பிள்ளை வேண்டும் என்று பெற்றோர்களை நச்சரித்த சம்பவங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கே அரங்கேறின.

கைகொடுக்காத கடல்
2006 ம் ஆண்டு சாசனம் படத்தில் நடித்த அரவிந்த் சாமி தமிழ் சினிமாவை விட்டு ஒதுங்கினார். கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப்பின்னர் அவரது ஆஸ்தான இயக்குநர் மணிரத்னம் இயக்கிய கடல் மூலம் அரவிந்த் சாமி மீண்டார் என்றாலும் கடல் அவருக்கு கைகொடுக்கவில்லை.

தனி ஒருவன்
இந்நிலையில் அழகான அரவிந்த் சாமியை வில்லனாகப் பார்க்கும் பாக்கியத்தை தமிழ் ரசிகர்கள் பெற்றனர். மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்த தனி ஒருவன் படத்தில் அலட்டிக் கொள்ளாத வில்லனாக நடித்து ரசிகர்களிடையே அப்ளாஸ் அள்ளினார். ஜெயம் ரவிக்கு இணையான வேடத்தில் நடித்து தனது நடிப்பால் தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் மீண்டும் அரவிந்த் சாமி இடம்பிடித்தார்.

மீண்டும்
தற்போது ரோமியோ ஜூலியட் இயக்குநர் லக்ஷ்மன் இயக்கப் போகும் அடுத்த படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து அரவிந்த் சாமி நடிக்கப் போவதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. பிரபுதேவா தயாரிக்கப் போகும் இப்படத்தில் பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி இருவரில் ஒருவரை நடிக்க வைக்கலாம் என்று முதலில் எண்ணியதாகவும் தற்போது அரவிந்த் சாமியை உறுதி செய்து விட்டதாகவும் கூறுகின்றனர். விரைவில் இது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











