பொங்கல் வெளியீட்டில் இணைந்தது ஜீவா- நயன்தாராவின் திருநாள்
சென்னை: ஜீவா - நயன்தாரா நடிப்பில் உருவாகியிருக்கும் திருநாள் திரைப்படத்தை பொங்கல் பண்டிகையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
ஜீவா, நயன்தாரா, மீனாட்சி, கருணாஸ், கோபிநாத் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் திருநாள். பி.எஸ்.ராம்நாத் இயக்கியிருக்கும் இப்படத்தில் ஈ படத்திற்குப் பின்னர் ஜீவாவுடன் இணைந்து நயன்தாரா நடித்திருக்கிறார்.

பிளேடு கணேஷ் என்ற கதாபாத்திரத்தில் ரவுடியாக ஜீவாவும், வித்யா என்ற மழலையர் பள்ளி ஆசிரியையாக நயன்தாராவும் நடித்திருக்கின்றனர்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கும் இப்படம் இந்த வருடத்தின் இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது படத்தை அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.
இப்படத்தின் கதை பற்றி இயக்குநர் ராம்நாத் கூறும்போது "திருநாள் என்பது என்ன? அந்த நாள் ஒரு பண்டிகை தினம்,நாம் அதனை விமரிசையாகக் கொண்டாடி மகிழ்வோம்.
அதே போல தீயவைகளை அழித்து நல்லவைகளை பரப்பும் ஒரு திருநாளைத் தான் எனது படத்தின் மையக் கருத்தாக வைத்திருக்கிறேன்" என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே விஷாலின் கதகளி, சிம்புவின் இது நம்ம ஆளு, சசிகுமாரின் தாரை தப்பட்டை, ஜெயம் ரவியின் மிருதன் மற்றும் அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து ஆகிய படங்கள் பொங்கல் வெளியீட்டிற்கு வரிசை கட்டி காத்திருக்கின்றன.
இந்நிலையில் ஜீவாவின் திருநாளும் இவ்வரிசையில் இணைந்திருக்கிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நயன்தாரா மற்றும் இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோரின் 2 படங்கள் ஒரே சமயத்தில் பொங்கலுக்கு வெளியாவதுதான்.


Click it and Unblock the Notifications











