வசூலில் “ வரலாறு” படைக்கும் ரோமியோ ஜூலியட்
சென்னை: ஜெயம் ரவியின் கண்களுக்கு தற்போது தெய்வமாகத் தெரிவது எது என்று கேட்டால், மனிதர் கண்ணை மூடிக் கொண்டு ரோமியோ ஜூலியட் படம்தான் என்று கூறுவார். ஆமாம் ஜெயம் ரவிக்கு அதிர்ஷ்ட தேவதை ரோமியோ ஜூலியட் படம் மூலம் திரும்பியுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் முக்கியமான ஒரு இடம் ஜெயம் ரவிக்கு உண்டு. ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்து வெளிவந்த படங்கள் தமிழ்நாட்டில் பெருவாரியான, குடும்பங்களை ஈர்த்ததில் தமிழ் சினிமாவின் வசூல் நாயகனாக வலம் வந்தவர்.
கடந்த 1 வருடங்களுக்கும் மேலாக நடித்த படங்கள் வெளிவராமல் பெரும் சோகத்தில் இருந்த ரவியின் மனக் காயங்களுக்கு, தற்போது மருந்து போட்டுள்ளது ரோமியோ ஜூலியட் திரைப்படம்.
ரோமியோ ஜூலியட் வசூல் நிலவரம், ஜெயம் ரவியின் தற்போதைய மார்க்கெட் நிலவரம் என்னவென்று பார்க்கலாம்.

ஜெயம் ரவி – ஹன்சிகா
எங்கேயும் காதல் திரைப்படத்தில் இணைந்து நடித்த ஜெயம் ரவி - ஹன்சிகா ஜோடி, மறுபடியும் பல வருடங்கள் கழித்து ரோமியோ ஜூலியட் படத்தின் மூலம் மீண்டும் இணைந்தனர். மாற்றம் என்னவெனில் எங்கேயும் காதல் திரைப்படத்தின் போது ஜெயம் ரவியின் மார்க்கெட் உச்சத்தில் இருந்தது, தற்போது ரோமியோ ஜூலியட் படத்தின் போது ஹன்சிகாவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது.

ரோமியோ ஜூலியட்
ஜெயம் ரவிக்கு மீண்டும் ஜெயத்தைக் கொடுத்துள்ளது ரோமியோ ஜூலியட் திரைப்படம், நிமிர்ந்து நில் படத்திற்குப் பின்னர் மீண்டும் சரியாக 1 வருடம் கழித்து வெளிவந்திருக்கும் ரோமியோ ஜூலியட் சரிந்து கொண்டிருந்த ஜெயம் ரவியின் மார்க்கெட்டை தூக்கி செங்குத்தாக மேலே நிறுத்தியுள்ளது.
ரசிகர்களின் வரவேற்பு
தொடர்ந்து பேய்ப்படங்கள் மற்றும் காமெடிப் படங்களை பார்த்து அலுத்துப் போன ரசிகர்கள் ரோமியோ ஜூலியட் படத்தை ஆதரித்ததில் வியப்பேதும் இல்லை. ஆனால் இவ்வளவு பெரிய வெற்றிப் படமாக ரோமியோ ஜூலியட்டை ரசிகர்கள் மாற்றியது, யாரும் எதிர்பாராதது. படம் வெளிவந்து இன்றோடு 21 நாட்கள் ஆகின்றன இன்றும் பெருவாரியான தியேட்டர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது படம்.

மொத்த வியாபாரம் 17 கோடிக்கும் மேலே
இதுவரை தமிழ்நாட்டில் மட்டும் விநியோகஸ்தர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் 11 கோடி ரூபாய் லாபம் கிடைத்திருக்கிறதாம், அதுமட்டுமின்றி சாட்டிலைட் உரிமை 6.5 கோடி ரூபாய்க்கு விலை போயிருக்கிறது. ஆக மொத்தம் 17.5 கோடி ரூபாயை தமிழ்நாட்டில் மட்டும் வசூலித்து இருக்கிறது ரோமியோ ஜூலியட்.
மீண்டும் சூடுபிடிக்கும் மார்க்கெட்
ரோமியோ ஜூலியட் வெற்றியால் கிடப்பில் கிடந்த ஜெயம் ரவியின் படங்கள் தூசு தட்டப்பட்டு மீண்டும் வேகமாக படப்பிடிப்புகள் நடந்து வருகின்றன. பூலோகம், அப்பாடக்கர் போன்ற இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளிவர இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கிறார் ஜெயம் ரவி.

ட்விட்டரில் நன்றி தெரிவித்த ஜெயம் ரவி
ரோமியோ ஜூலியட் இன்னமும் நன்றாகப் போகிறது என்று கூறி தனது மகிழ்ச்சியை ட்விட்டரில் தெரிவித்து இருக்கிறார்ஜெயம் ரவி, மேலும் ரோமியோ ஜூலியட்டை வெற்றிப் படமாக மாற்றிய எனது அன்பு ரசிகர்களுக்கு நன்றி என்றும் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











