'எத்தனை முறைடா ஒரு பொண்ணுக்கு தாலி கட்டுவீங்க?' - விஷாலைக் கலாய்த்த ஜேகே ரித்தீஷ்
சென்னை: ஏற்கெனவே அடிக்கல் நாட்டு விழா நடத்தப்பட்ட நடிகர் சங்க கட்டடத்துக்கு மீண்டும் அடிக்கல் நாட்டு விழா எதற்காக?, என்று நடிகரும் முன்னாள் எம்பியுமான ஜேகே ரித்தீஷ் கேள்வி எழுப்பினார்.
நடிகர் சங்கத்தில் நிர்வாக மாற்றம் வர முக்கிய காரணமாக இருந்தவர் ஜேகே ரித்தீஷ். விஷால் அணிக்கு பக்க பலமாக இருந்து அவர்களை ஜெயிக்க வைத்தவர் ரித்தீஷ்தான். ஆனால் வென்ற பிறகு விஷால் அணியின் போக்கு பிடிக்காததால் அவர்களை விட்டு விலகிவிட்டதாக அறிவித்துள்ளார்.
இப்போது தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கலைப்புலி தாணு ஆதரவு பெற்ற ராதாகிருஷ்ணன் அணிக்கு ஆதரவாகக் களமிறங்கியுள்ளார்.

நேற்று பிரசாத் லேபில் நடந்த ராதாகிருஷ்ணன் அணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட ஜேகே ரித்தீஷ் பேசுகையில், "சென்ற வருடம் மார்ச் 5 ம் தேதி நாசருக்கும் எனக்கும் பிறந்தநாள். அன்றைக்கு விஷால் என்ன நினைத்தாறோ. ஆளுக்கு ஒரு கல்கொடுத்து நட்டு வைக்க சொன்னார். நடிகர் சங்க கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா அது.
திடீரென்று தன் பதவிக்காக ஒரு பல்டி அடித்து மீண்டும் மார்ச் 31 அன்று அடிக்கல் நாட்டு விழா என்கிறார். இவ்ளோ அவசரம் ஏன் அவருக்கு?
விஷால் எங்களுக்குப் போட்டியே இல்லை.அவருக்கு வாக்குகளே இல்லை. எங்களுக்குப் போட்டி அண்ணன் கேயார் அணி மட்டும்தான். எங்கள் வெற்றி விழாவுக்கு வேண்டுமானால் விஷால் வரட்டும்," என்றார்.


Click it and Unblock the Notifications











