ஜோக்கர்... ரொம்ப நாளைக்குப் பிறகு வரும் ஒரு சீரியஸ் அரசியல் படம்!
'குக்கூ' என்ற தன் முதல் படத்திலேயே முத்திரை இயக்குநராகிவிட்ட ராஜு முருகன் அடுத்து இயக்கும் படம் ஜோக்கர்.
படத்தின் இசை வெளியீடு இன்று பிரசாத் லேபில் நடந்தது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் எஸ்.ஆர். பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
குருசோமசுந்தரம், காயத்ரிகிருஷ்ணா, ரம்யா மற்றும் பலர் நடித்துள்ளனர். செழியன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஷான் ரோல்டன்
யுகபாரதி எழுதியுள்ள பாடல்களுக்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன் படத்தில் பாடிய பாடகர்களை எல்லாம் அறிமுகப்படுத்திவிட்டு பேசத் தொடங்கினார். அவர் பேசும் போது, "இந்தப் படத்தின் பாடல்கள் வெற்றி பெறுவதற்கு கவிஞர் யுகபாரதியின் வரிகள்தான் முக்கிய காரணம். சினிமாவை மிகவும் விரும்பி தயாரிக்கக் கூடிய தயாரிப்பாளர்களில் ட்ரீம் வாரியர்ஸ் பிரபு சாரும் ஒருவர், என்றார்.

எஸ் ஆர் பிரபு
தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு பேசுகையில், "சகுனி' படத்தைத் தொடர்ந்து நாங்கள் தயாரிக்கும் படம் 'ஜோக்கர்'.
அந்தக் கதையை படித்த பிறகு கண்டிப்பாக நான் இதைச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. படத்தின் ஒளிப்பதிவிற்காக நாங்கள் செழியனைத் தொடர்பு கொண்ட போது,மிக மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டார்.
இயக்குனர் ராஜூமுருகன், குரு சோமசுந்தரத்தினை முதலில் வேறு கதாபாத்திரத்திற்குத் தான் முடிவு செய்து வைத்திருந்தார். ஆனால் அவருடன் தொடர்ந்து பணியாற்றும் போதுதான் அவருடைய திறமையைத் தெரிந்து கொண்டு படத்தின் முக்கிய கதாபாத்திரத்தினை அவருக்குக் கொடுத்தார். அனைவருக்கும் இது ஒரு வெற்றிப்படமாக அமையும், என்றார்.

யுகபாரதி
பாடலாசிரியர் கவிஞர் யுகபாரதி பேசுகையில், "என்னங்க சார் உங்க சட்டம்' மாதிரியான பாடல் எழுத 15 வருடங்கள் காத்திருந்தேன். ஷான் ரோல்டனின் இசைக்கு மட்டுமல்ல, பாடல் வரிகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகன். 'சூது கவ்வும்' படத்தில் வரும் 'எல்லாம் கடந்து போகுமடா' பாடல் வரிகளில் என்னை பிரமிக்க வைத்தவர் அவர். ஒரு திரைப்படம் உருவாக பணம் மட்டுமே போதாது. தைரியம் அதை விட முக்கியம். அந்த வரிசையில் 'ஜோக்கர்' குறிப்பிடத்தக்க ஒரு படம்.

குரு சோமசுந்தரம்
நடிகர் குரு சோமசுந்தரம் பேசுகையில், "ஜோக்கர்' படத்தில் ஏற்கனவே 'என்னங்க சார் உங்க சட்டம்' பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி உள்ளன. பாடலாசிரியர் யுகபாரதியின் வரிகளில்,ஷான் ரோல்டனின் இசையில் வந்துள்ள பாடல்கள் உங்கள் அனைவருக்கும் பிடிக்கும். என்னிடம் சில பேர் கேட்டார்கள், "என்ன, முதல் படம் ஹீரோவா பண்றீங்க, அதுவும் அரசியல் படமா?' என்று. இது
வெறும் அரசியல் பற்றிய படம் மட்டுமல்ல. சினிமா என்பது இயக்குநர்களின் மீடியம். அவர்கள் நிச்சயமாக நல்ல படங்களைத்தான் தருவார்கள். இந்தப் படத்தில் என்னுடைய கதாபாத்திரம் எனக்கு 'அல்வா' சாப்பிடுவது போல அமைந்திருக்கிறது," என்றார்.

ராஜு முருகன்
இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது, "படத்தின் தயாரிப்பாளர்கள்,படம் உருவாகிக் கொண்டிருக்கும்போது எந்தவித இடையூறும் செய்யாமல், என்னுடைய வேலையை என்னைச் செய்யவிட்டார்கள். இந்தப் படம் பிளாக் பஸ்டர் பட வரிசையில் இருக்குமா என்று எனக்குத் தெரியாது. இது சீரியஸான அரசியல் படம். அதே நேரம் எள்ளல் நகைச்சுவையும் இருக்கும்.
தமிழகத்தில் இருக்கும் 10கோடி மக்களில் படிப்பறிவு இல்லாத 6 கோடி மக்களைக் குறி வைத்துதான் சமூகத்தின் ஆதிக்க சக்தியாக இருக்கும் அரசியல்வாதிகள், பெரு வர்த்தக முதலாளிகள், திரையுலகினர் ஆகியோர் நகர்ந்து கொண்டிருக்கின்றனர்," என்றார்.

வெற்றிமாறன்
இயக்குனர் வெற்றிமாறன் பேசுகையில், "ஜோக்கர்' மாதிரியான கதைக்களம் உள்ள படங்களைக் கவனமாகக் கையாளவேண்டும். இந்தப்படத்தினைத் தயாரிக்க, தயாரிப்பாளருக்கு ஒரு துணிச்சல் வேண்டும். தயாரிப்பாளருக்கு என் பாராட்டுக்கள். நடிகர் சோமசுந்தரத்தினை நடிப்பினை ஒரு நாடகத்தில் பார்த்து பிரமித்துப் போனேன். இரட்டை வேடங்களில் அவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார். அவரை இந்தப் படத்தின் கதாநாயகனாகப் பார்ப்பது மிக்க மகிழ்ச்சி," என்றார்.
இயக்குனர் பாலா, "இந்தப் படத்தினை முதலில் நான் தான் தயாரித்திருக்க வேண்டும். எஸ்ஆர் பிரபு என்னை விட சிறந்த தயாரிப்பாளர். படம் நிச்சயமாக வெற்றி பெறும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்," என்றார்.
நடிகை காயத்ரி கிருஷ்ணா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஆகியோரும் நிகழ்ச்சியில் பேசினர்.


Click it and Unblock the Notifications











