ரஜினியின் 'காலா' படத்திற்கு தடை கோரிய வழக்கு - உரிமையியல் நீதிமன்றம் அதிரடி
சென்னை : 'காலா' படத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு மனுதாரருக்கு அறிவுறுத்தியுள்ளது.
கபாலி படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினி - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகி வரும் கேங்ஸ்டர் படம் காலா. மும்பையில் வாழ்ந்த தமிழர் ஒருவரின் வாழ்க்கையைத் தழுவி இந்தப் படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் இப்படத்தைத் தயாரிக்கிறார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை வெளியிட இருக்கிறது. படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

மூலக்கரு என்னுடையது
இந்நிலையில் ராஜசேகரன் என்பவர், 'காலா' படத்தின் மூலக்கரு மற்றும் தலைப்பு என்னுடையது, ரஜினி நடிக்கும் இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

பதில் மனு தாக்கல்
இந்த வழக்கில் நடிகர் ரஜினிகாந்த், ரஞ்சித் தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில் 'காலா' படத்தின் கதை யாரிடமிருந்தும் திருடப்படவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

ஆதாரம் தாக்கல்
இதனையடுத்து மனுதாரர் ராஜசேகரன் நடிகர் ரஜினிந்த் தான் சந்தித்தது தொடர்பான புகைப்படங்களை ஆதாரமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த வழக்கில் ரஜினி, ரஞ்சித் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுதாரருக்கு அறிவுறுத்தல்
இந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, காப்புரிமை சட்டத்தின் கீழ் தான் இந்த வழக்கை விசாரிக்க முடியும் என காலா தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, மனுதாரர் உயர்நீதிமன்றத்தை அணுக அறிவுறுத்தியுள்ளார்.

காப்பிரைட் விவகாரம் - தள்ளுபடி
மனுதாரர் ராஜசேகரனை, சென்னை ஐகோர்ட்டில் முறையிட அறிவுறுத்தியதுடன் இந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார் நீதிபதி இளங்கோவன்.


Click it and Unblock the Notifications











