பிரம்மாவுடன் கை கோர்க்கிறார் ஜோதிகா... மீண்டும் ஒரு பெண்ணின் கதை?
சென்னை: நடிகை ஜோதிகா அடுத்ததாக குற்றம் கடிதல் இயக்குநர் பிரம்மாவின் படத்தில் நடிக்கவிருப்பதாக நம்பத் தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கொடிகட்டிப் பறந்த நடிகை ஜோதிகா திருமணத்திற்குப் பின் சினிமாவை விட்டு ஒரேயடியாக ஒதுங்கினார்.

சுமார் 8 வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த ஜோதிகாவுக்கு கடந்த ஆண்டு வெளியான 36 வயதினிலே படம் ரீஎன்ட்ரி கொடுத்தது.
இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்லதொரு வரவேற்பைப் பெற்றது. இதனால் தமிழில் தொடர்ந்து நடிக்க ஜோதிகா முடிவு செய்தார்.
ஆனால் அவரின் அடுத்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதேபோல குற்றம் கடிதல் படத்திற்குப் பின் பிரம்மாவின் அடுத்த படம் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் திரையுலகினர் மத்தியில் நிலவியது.
இந்நிலையில் குற்றம் கடிதல் படத்தின் மூலம் அனைவரையும் உருக வைத்த பிரம்மாவின் அடுத்த படத்தில் ஜோதிகா நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.
தற்போது பெண்களின் பிரச்சினைகளை அலசும் ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டு அதற்கான கதை, விவாதத்தில் பிரம்மா ஈடுபட்டு வருகிறாராம்.
பெண்களை மையமாகக் கொண்ட படமென்பதால் ஜோதிகாவை இப்படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறதாம். ஜோதிகாவிற்கும் கதை பிடித்திருப்பதால் விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குற்றம் கடிதல் போல இப்படத்தின் திரைக்கதையையும் பிரம்மா அழுத்தமாக அமைத்திருப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











