பையன்... பத்திரிகையாளர் பாலனின் இரண்டாவது படம்.. முதல் பாடலை வெளியிட்ட பாக்யராஜ்!
பத்திரிகையாளர், பத்திரிகைத் தொடர்பாளர் என பணியாற்றிய பாலன், தனது இரண்டாவது படத்தை முடித்துவிட்டார்.
படத்தின் பெயர் பையன்.

படம் குறித்து பாலன் என்கிற பாலு மலர்வண்ணன் இப்படிச் சொல்கிறார்:
கருத்துள்ள ஒரு அருமையான படமாக ‘பையன்' படத்தை எடுத்திருக்கிறேன். படத்தைப் பார்க்கும் போது ஒரு பத்திரிகையாளன் எடுத்தப் படம்டா என்று சட்டைக் காலரை தூக்கி விட்டுக் கொள்கிற மாதிரியான படமாகத்தான் இருக்கும் என்பதை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்போது படத்தை முடித்து மக்களிடம் கொண்டு செல்லும் முயற்சியாக முதலில் பாடல் வெளியிடும் வேலையில் இறங்கி இருக்கிறேன்.
பி.எஸ்.ராகுல் என்கிற மீடியா நண்பர் ஒருவரை இந்தப் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அவரிடம் உள்ள திறமையை வெளிக்கொண்டு வரும் முயற்சியாக இது நடந்திருக்கிறது.

எனது முயற்சிக்கு பங்கெடுத்த எனது நண்பரும், படத்தின் தயாரிப்பாளருமான டி.மதுராஜ், 'பாத்து பாத்து...'' என்று துவங்குகிற ஒரு பாடலை எழுதி இருக்கிறார். ‘ஊதா கலரு ரிப்பன்...' பாடலின் மூலம் புகழ் பெற்ற ஹரிகரசுதன் அந்தப் பாடலை பாடி இருக்கிறார்.

மிக அற்புதமாக உருவாக்கியுள்ள இந்தப் பாடலை நீங்கள் கேட்க வேண்டும். இந்தப் பாடல் குறித்த உங்கள் ஆலோசனைகளை ஆர்வத்துடன் எதிர்ப்பார்க்கிறேன்," என்றார்.

இன்று (14.12.2015) இந்தப் பாடலை வெளியிட்டிருக்கிறார்கள். பாடலாசிரியரும், தயாரிப்பாளருமான மதுராஜின் குருநாதர், கே.பாக்யராஜ் முதல் பாடலை வெளியிட, பாலனின் குருநாதர் டைமண்ட் பாபு பெற்றுக் கொண்டார். பி.ஆர்.ஓ.யூனியன் தலைவர் விஜயமுரளி வாழ்த்திப் பேசினார்.


Click it and Unblock the Notifications











