சின்ன பட்ஜெட் படத்தில் நடித்துத்தான் பெரிய நடிகர்கள் ஆனார்கள்!- இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார்
சென்னை: பெரிய நடிகர்களாக உள்ளவர்கள் எல்லோருமே சின்ன பட்ஜெட் படங்களில் நடித்து இந்த நிலைக்கு வந்தவர்கள்தான் என்றார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.
சன்மூன் கம்பெனி என்ற பட நிறுவனம் தயாரிக்கும் படம் சண்டிக்குதிரை. இந்த படத்தில் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் சின்ன திரையில் பிரபலமான நடிகர். கதாநாயகியாக மானஸா அறிமுகமாகிறார்.

பாடல்கள் எழுதி இசையமைக்கிறார் - வாரஸ்ரீ. இவர் 6000 பக்தி பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார். இவரது பாடல்களை எல்லா பிரபல பாடகர்களும் பாடி இருகிறார்கள். அவற்றில் எஸ்பிபி பாடிய 'நமச்சிவாயா நமச்சிவாயா ஓம் நமச்சிவாயா' என்ற பாடலும் அடக்கம். இவர் இசையமைக்கும் முதல் படம் இது.
கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் - அன்புமதி. இவர் பல பத்திரிக்கைகளில் 350 க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியவர். அத்துடன் எல்லா பிரபலமான தொலைக்காட்சிகளிலும் இயக்குனராக, கதாசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார்.
இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.

விழாவில் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் பேசுகையில், "சின்ன படம் சின்ன படம் என எல்லோரும் பேசுகிறார்கள். எது சின்ன படம் எது பெரிய படம் என யார் நிர்ணயிப்பது... வெற்றியை வைத்துதான்?
கமல் நடித்த அவர்கள் படம் வெறும் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப் பட்டதுதான். ரஜினி, கமல், ஸ்ரீதேவி நடித்த மூன்று முடிச்சு படம் பத்து லட்சம் ரூபாய் செலவில் எடுக்கப்பட்டதுதான்.
நான் இயக்கிய முதல் படமான புரியாத புதிர் முப்பது லட்சம் ரூபாய் செலவிலும், சேரன் பாண்டியன் முப்பத்து மூன்று லட்சம் ரூபாய் செலவிலும்தான் எடுக்கப் பட்டது. படங்கள் வெற்றிபெறும் போதுதான் எல்லோரும் பெரிய நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள் ஆகிறார்கள். சின்ன படமாக இருந்தாலும் நல்லா எடுத்திருக்கிறோம் என்பதில் மட்டும் திருப்தி அடைந்து விடாதீர்கள். இன்ட்ரஸ்டிங்கா எடுங்க அப்பத் தான் படமும் ஓடும் நீங்களும் 'பெரிய' என்கிற இடத்தை அடைய முடியும்," என்றார்.

இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி பேசுகையில், "இயக்குநர் அன்புமதி, நடிகர் ராஜ்கமல் இருவரும் சின்னத் திரையிலிருந்து வந்திருக்கிறார்கள். அவர்கள் சண்டிக்குதிரை படத்தை எடுத்து முடித்து இசை வெளியீட்டு விழா வரை வந்திருக்கிறர்கள் இந்த படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். நான் சின்னத் திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்தபோது, ஒரு பெரிய நடிகரிடம் கதை சொன்னேன், கதை நன்றாக இருக்கு..சின்னத் திரை இயக்குனர் மேக்கிங் எப்படி இருக்கும் என்று தெரியாது. அதனால் கதையை மட்டும் வாங்கிக் கொண்டு விடுங்கள் என்று தயாரிப்பாளரிடம் சொல்லி வெளியே அனுப்பினார். இன்று நான் இயக்குநராகவும், நடிகராகவும் நிற்கிறேன்... அதனால் வெற்றி உங்கள் அருகில்தான் இருக்கு," என்றார்.
விழாவில் ரவிமரியா, ஜாக்குவார் தங்கம், லியாகத் அலிகான், அரவிந்தராஜ், கஞ்சா கருப்பு மற்றும் படத்தின் இணை தயாரிப்பாளர் பிரகாசம், ராஜ்கமல், நாயகி மானஸா, இசையமைப்பாளர் வாராஸ்ரீ, ஒளிப்பதிவாளர் வீரா, பாடகர் பிரசன்னா, இயக்குநர் அன்புமதி ஆகியோர் பேசினர்.


Click it and Unblock the Notifications











