கோ நாயகனுடன் இணையும் கே.வி.ஆனந்த்?
சென்னை: கே.வி.ஆனந்த் அடுத்ததாக நடிகர் ஜீவாவுடன் கைகோர்க்கவிருக்கிறார் என்று புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அஜீத் தொடங்கி ஆர்யா, சிவகார்த்திகேயன் மற்றும் ஜெயம் ரவி பெயர்கள் அடிபட்ட நிலையில் தற்போது ஜீவாவின் பெயரும் அடிபடத் தொடங்கியிருக்கிறது.
2011 ம் ஆண்டில் இருவரும் இணைந்த கோ திரைப்படம் மாபெரும் வெற்றிப் படமாக மாறியதுடன், அந்த வருடத்தின் பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாகவும் மாறியது.

வெறும் 14 கோடியில் எடுக்கப்பட்ட இப்படம் உலகம் முழுவதும் சுமார் 175 கோடிகளை வாரிக் குவித்தது, மேலும் பாக்ஸ் ஆபீஸில் 175 நாட்கள் வெற்றிகரமாக வெள்ளிவிழா கொண்டாடியது.
கே.வி.ஆனந்த் மற்றும் ஜீவா இருவரின் திரையுலக வாழ்விலும் ஒரு மைல்கல்லாக மாறிய இப்படம் ரசிகர்களாலும், விமர்சகர்களாலும் கொண்டாடப்பட்டது.
இந்நிலையில் மீண்டும் ஜீவாவுடன் இணைந்து கே.வி.ஆனந்த் பணியாற்றவிருக்கிறார். இருவரையும் இணைத்து படமெடுக்கப்போவது கோ படத்தைத் தயாரித்த எல்ரெட்குமார் தானாம்.
இதுதொடர்பான பேச்சுகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும், விரைவில் இதுகுறித்த முறையான அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஜீவா இப்போது திருநாள், போக்கிரிராஜா ஆகிய இரண்டுபடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார், 2 படங்களின் படப்பிடிப்பும் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











