‘கடைசி விவசாயி’... காக்கா முட்டை மணிகண்டனின் புதிய படம்... ஹீரோவாக 70 வயது தாத்தா!
சென்னை: முதல் படமான காக்கா முட்டை மூலமே பெரும் கவனத்தை ஈர்த்த இயக்குநர் மணிகண்டன், அடுத்ததாக விவசாயிகள் பிரச்சினையை கதைக்களமாகக் கொண்டு புதிய படம் இயக்க இருக்கிறார்.
சேரிக் குழந்தைகளின் பீட்சா ஆசையை கதைக்களமாகக் கொண்டு மணிகண்டன் இயக்கிய காக்காமுட்டை தேசிய விருதைப் பெற்றது. முதல் படம் மூலமே கவனிக்கத்தக்க இயக்குநர்களுள் ஒருவர் ஆனார் மணிகண்டன்.

காக்கா முட்டையைத் தொடர்ந்து அவர் இயக்கிய குற்றமே தண்டனை விரைவில் ரிலீசாக இருக்கிறது. அதற்குள்ளாக விஜய் சேதுபதி நடிப்பில் ஆண்டவன் கட்டளை படத்தையும் எடுத்து முடித்து விட்டார் மணிகண்டன்.
இதனால் அடுத்தடுத்து அவரது படங்கள் ரிலீசுக்குத் தயாராக உள்ளன.
இந்நிலையில், தனது புதிய படத்திற்கான வேலையை அவர் தொடங்கி விட்டார். இப்படம் விவசாயிகள் பிரச்சினையை மையமாகக் கொண்டதாம். இந்தப் படத்திற்கு 'கடைசி விவசாயி' எனப் பெயரிடப் பட்டுள்ளது.
இந்த படத்தில் விவசாயிகள் படும் கஷ்டங்களை மிக எளிமையாக அதே நேரத்தில் அழுத்தமாக இயக்குனர் சொல்லவுள்ளாராம்.
ஏற்கனவே, விவசாயிகளின் பிரச்சினையைப் பற்றி நிறைய படங்கள் தமிழில் வந்துள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படமும் விவசாயிகளின் பிரச்சனைகளை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.
இந்நிலையில் விவசாயிகளின் பிரச்சினையை மணிகண்டனும் கையில் எடுத்துள்ளது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதலாக இப்படத்தைப் பற்றிய மற்றொரு சுவாரஸ்யத் தகவல், இப்படத்தின் நாயகனுக்கு வயது 70. எனவே, தனது நாயகனைத் தேடும் பணியை மணிகண்டன் முடுக்கி விட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











