காந்தியை சுட்ட கோட்சே வெறும் துப்பாக்கிதான்… பெரியாரின் கருத்தை சுட்டிக்காட்டிய சூர்யா
Recommended Video
சென்னை: கோட்சே, பியாந்த் சிங், தனு இவர்கள் யாருமே தனி மனிதர்கள் கிடையாது. இந்த தனி மனிதர்களின் பின்புலமாக ஒரு பெரிய இயக்கமே உள்ளது. இந்த இயக்கம் சார்ந்த எத்ததையோ ஆட்கள் உள்ளனர். அவர்களை மையமாக வைத்துதான் காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று நடிகர் சூர்யா கூறியுள்ளார்.
அயன் படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவும் இயக்குநர் ஆனந்த்தும் இணைந்து உருவாகியுள்ள திரைப்படம் காப்பான். இத்திரைப்படத்தில் நாயகியாக சாயிஷா சைகல் நடித்துள்ளார். மேலும் மோகன்லால், ஆர்யா, இயக்குநர் சமுத்திரக்கனி, மயில்சாமி, பொமன் இரானி உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு சூர்யாவும் ஆனந்த்தும் இணைந்திருப்பதால், இப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகியிருக்கும் இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்திருக்கும் இந்தப்படத்திற்கு இயக்குநர் ஆனந்த்தின் ஃபேவரைட் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் நடிகர் மோகன்லால் இந்தியப் பிரதமராகவும், அவருக்கு பாதுகாப்பளிக்கும் குழுவின் உயர் அதிகாரியாகவும் சூர்யா நடித்துள்ளார். இப்படத்திற்கு யுஏ தணிக்கை சான்றிதழ் கிடைத்துள்ளது

நாதுராம் கோட்சே
இந்த படத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய சூர்யா , மஹாத்மா காந்தியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றது நாதுராம் கோட்சே என்றுதான் எல்லோருமே பேசுகின்றோம். அதே மாதிரி தான், காந்தியை சுட்டுக்கொன்ற விஷயத்தை தந்தை பெரியாரிடம் சொன்னபோது, முதலில் அந்த துப்பாக்கியை வாங்கி உடைக்கணும் என்று சொன்னாராம்.

பெரியார் கருத்து
அதற்கு காரணம் கேட்டபோது, கோட்சேவும் சாதாரண மனுஷன் தானே, அவன் என்ன பாவம் பண்ணினான். அவன் வெறும் துப்பாக்கி தான். ஆனால் அவனுக்கு பின்னாடி ஒரு இயக்கமே இருக்கும் என்று வேதனையோடு குறிப்பிட்டாராம்.

மனித வெடிகுண்டு
ஏன், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவருடைய பாதுகாவலர்களாக இருந்த சத்வந்த் சிங் மற்றும் பியாந்த் சிங் என இருவர் சுட்டுக்கொன்றனர். அதேபோல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை தனு என்ற மனித வெடிகுண்டாக மாறி படுகொலை செய்தார். இப்படி மஹாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி என மூவரையும் கொன்றது தனி மனிதன் கிடையாது.

காப்பான்
அந்த கோட்சே, பியாந்த் சிங், தனு இவர்கள் யாருமே தனி மனிதர்கள் கிடையாது. இந்த தனி மனிதர்களின் பின்புலமாக ஒரு பெரிய இயக்கமே உள்ளது. இந்த இயக்கம் சார்ந்த எத்ததையோ ஆட்கள் உள்ளனர். அவர்களை மையமாக வைத்துதான் காப்பான் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டு பேசினார்.

கே.வி ஆனந்த்
கே.வி ஆனந்த் திரைப்படம் என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது. அதேபோல் இந்தப்படமும் செம விறுவிறுப்பாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டரை மணி நேரம் ஒடக்கூடிய வகையில் படமாக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டு பரிமாணங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்று இயக்குனர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











