அப்படின்னா... செங்கல்பட்டு அரங்குகளில் 24, எஸ்3, கபாலி ரீலீசாகாதா?
செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள தியேட்டர்களில் தெறி படம் வெளியாகாததைத் தொடர்ந்து, இனி வரவிருக்கும் கபாலி உள்ளிட்ட பெரிய படங்களின் நிலை குறித்து கேள்வி எழுந்துள்ளது.
எம்ஜி எனப்படும குறைந்தபட்ச உத்தரவாதத் தொகை அடிப்படையால்தான் படத்தைத் தருவேன் என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கூறிவிட்டதாலும், தியேட்டர்களில் அதிகக் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்று அரசு உத்தரவிட்டதாலும், செங்கல்பட்டு ஏரியா தியேட்டர் உரிமையாளர்கள் தெறி படத்தை குறைந்த விலைக்குக் கேட்டனர்.

ஆனால் ரூ 100 கோடிவரை இந்தப் படத்துக்கு செலவழித்துவிட்ட தாணு, படத்தின் விலையைக் குறைப்பது சாத்தியமில்லை என்று கூறிவிட்டார்.
இந்தப் பிரச்சினை இன்றுவரை தீரவே இல்லை. செங்கல்பட்டு ஏரியாவில் உள்ள 75 சதவீத அரங்குகளில் தெறி படம் வெளியாகவே இல்லை. இது ரசிகர்களுக்கு ஏமாற்றம் மட்டுமல்ல, கலைப்புலி தாணுவுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளுக்கும் பெருத்த அடி. தெறியின் நான்கு நாள் ஓபனிங் அவர்களுக்கு இழப்பு.
இப்படி ஒரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள செங்கல்பட்டு தியேட்டர் உரிமையாலர்களுக்கு இனி படங்களைக் கொடுப்பதில்லை என்று தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது.

குறிப்பாக இன்னும் இரு மாதங்களில் வெளியாகவிருக்கும் பெரிய படங்களான ரஜினிகாந்தின் கபாலி, சூர்யா நடித்துள்ள சிங்கம் 3, 24 போன்ற படங்களை சர்வ நிச்சயமாக செங்கல்பட்டு தியேட்டர்களுக்கு தரப்போவதில்லை என்று தாணு மற்றும் இதர தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.
பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ளும் நோக்கம் தியேட்டர்காரர்களுக்கும் இல்லை என்பது நேற்றைய அவர்கள் பிரஸ் மீட் மூலம் தெரிந்துவிட்டது.
எனவே கபாலி உள்ளிட்ட பெரிய படங்களப் பார்க்க பக்கத்து மாவட்டத்துக்குச் செல்ல வேண்டி வருமோ என்ற நிலைதான் இப்போது நீடிக்கிறது.


Click it and Unblock the Notifications











