மலாய் மொழியில் முதல் முறையாக கபாலி... ரஜினிக்காக டப்பிங் பேசப் போவது யார்?
சென்னை: மலாய் மொழியில் டப் செய்யப்படுகிறது ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி. தமிழ்ப் படம் ஒன்று மலாய் பேசப் போவது இதுதான் முதல் முறை.
கபாலி படத்தின் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. ரஜினி படங்கள் பெரும்பாலும், தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளிவரும்.

மலாய்
கடந்த 2014-ம் ஆண்டு இதே தேதியில் வெளியான கோச்சடையான் மட்டும்தான் 6 மொழிகளில் வெளியானது.
இப்போது முதன்முறையாக மலாய் மொழியில் இப்படம் டப் செய்யப்பட்டு வெளிவரவிருக்கிறது.

200 பேர்
மலாய் மொழியில் ரஜினிக்காக ‘கபாலி'யில் பேச 200 பேர் வரை குரல் தேர்வு நடத்தியுள்ளனர். மலாய் கபாலிக்காக தனி டீசர் ஒன்றையும் உருவாக்க திட்டமிட்டுள்ளனர். கிட்டத்தட்ட 15 நாட்களாக நடந்த இந்த குரல் தேர்வில் ரஜினியின் கபாலிடா என்ற வசனத்தை ரஜினியின் குரலுக்கு ஏற்றார்போல் பேசுவதற்கு பலரும் முயற்சி செய்தார்களாம். ஒருவழியாக அருண் என்பவர் தேர்வாகியிருக்கிறார்.

ரசிகர்
அருண், சிறு வயதிலிருந்தே ரஜினியின் தீவிர ரசிகர். ரஜினியின் குரலுக்கு அருணின் குரல் கச்சிதமாக பொருந்தவே அவரை தேர்வு செய்துள்ளனர். இவர் மலாய் மொழியில் டப்பிங் பேசிய பிறகு, அதன் டீசர் வெளியாகும் என கூறப்படுகிறது.

மலேசியாவில்
இந்தப் படத்தின் பெருமளவு காட்சிகள் மலேசியாவில் எடுக்கப்பட்டதாலும், மலேசியா, சிங்கப்பூரில் ரஜினிக்கு உள்ள ஏராளமான ரசிகர்களைக் கருத்தில் கொண்டும் படத்தை மலாயில் வெளியிடுகிறார்கள்.

இசை வெளியீடு
வரும் ஜூன் 5-ம் தேதி கபாலியின் இசை வெளியீட்டை சத்யம் திரையரங்கில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இன்னும் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











