கபாலி மகிழ்ச்சி திருவிழா... 100 பேருக்கு தையல் மிஷின் வழங்கும் தூத்துக்குடி ரசிகர்கள்!
தூத்துக்குடி: ரஜினிகாந்தின் கபாலி படத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வரும் விதம் இந்த நூற்றாண்டின் இன்னொரு அதிசயம் என்றால் மிகையல்ல.
படம் வெளியாவதற்கு முன்பிலிருந்தே கபாலியை உலகளவில் மிகப் பெரிய படமாக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்பு காட்டினர் ரசிகர்கள்.

கபாலியின் டீசருக்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு வரலாறானது. சர்வதேச கமர்ஷியல் படங்களை ஜஸ்ட் லைக் தட் மிஞ்சியது கபாலி.
அடுத்து இந்தப் படத்தின் ஆடியோ. இன்றைக்கு ஆயிரம் சிடிக்கள் விற்றாலே அபூர்வம் என்ற நிலையில், இந்தப் படத்தின் இசை வெளியீட்டு உரிமை கோடிகளில் விற்றது. பல லட்சம் டவுன்லோடுகள். பல்லாயிரம் சிடிக்கள் முதல் நாளே விற்றுத் தீர்ந்தன. ரசிகர்களே இசை வெளியீட்டு விழா நடத்திய அதிசயமும் கபாலிக்கு நிகழ்ந்தது.

இதையெல்லாம் விட பெரிய சாதனை, இந்த பாடல் வரிகள் கொண்ட வீடியோக்களுக்கு யுட்யூப் மூலம் கிடைத்த வரவேற்பும் வருவாயும்.
படம் வெளியானது. அப்போதுதான் ரஜினியின் சூப்பர் ஸ்டார் இமேஜுக்குள்ள சக்தி விஸ்வரூபம் எடுத்தது.
தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டன. அத்தனை அரங்குகளையும் அதிர வைத்தனர் ரசிகர்கள். படம் வெளியான முதல் நாள் இருந்த அதே உற்சாகத்தை அடுத்தடுத்த வாரங்களிலும் காட்டினர்.
சாதாரண ரசிகர்கள் இந்தப் படத்தை இரு முறை, மூன்று முறை எனப் பார்க்க, ரஜினி ரசிகர்களோ 10 முறை, 25 முறை எனப் பார்த்ததாக தத்தமது சமூக வலைத் தளப் பக்கங்களில் பெருமையாகப் பகிர்ந்து வருகின்றனர்.
படத்தின் 25வது நாள், 35வது நாளை திரையரங்குகளில் ரசிகர்கள் இனிப்பு வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
அடுத்து தூத்துக்குடி கிளியோபட்ரா திரையரங்கில் வரும் ஞாயிற்றுக்கிழமை (28.08.16) மாலை 6 மணி காட்சியில் 100 பேருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் மாபெரும் சாதனை திருவிழாவாகக் கொண்டாடுகின்றனர் ரஜினி ரசிகர்கள்.
படத்தின் 50வது நாளை வெகு விமர்சையாகக் கொண்டாடவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி தெய்வீகத் தென்றல் ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் இதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











