இன்னமும் குறையாத கபாலி ஜுரம்... கோவையில் புதிய சாதனை!
கடந்த வாரம் கபாலி வெளியானது. சுனாமியாய் திரையுலகை சுற்றிச் சுழன்று வசூலை வாரிக் குவித்துக் கொண்டிருக்கிறது. எதிர்மறை விமர்சனகள் அந்த சுனாமியில் சிக்கி இருந்த இடம் தெரியாமலே போய்விட்டன.
முதலில் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாகப் பார்த்தனர். இப்போது குடும்பம் குடும்பமாக மக்கள் பார்த்து வருகின்றனர். குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக சீரியலே கதி என்று கிடந்த பெண்கள் முதல் முறையாக கபாலியைப் பார்க்க திரளாக வருகின்றனர்.

நங்கநல்லூர், உள்ளகரம், குரோம்பேட்டை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் என சென்னை நகரை ஒட்டியுள்ள பல ஊர்களின் அரங்குகளில் டிக்கெட் விலை சகஜமாகிவிட்டதால், நடுத்தர மக்கள் கபாலி பார்க்க ஆரம்பித்துள்ளனர்.
கபாலிக்கு இந்த வார இறுதி நாட்கள் அனைத்திலுமே முன்பதிவிலேயே ஃபுல்லாகிவிட்டது. கோவை நகரின் சினிமா சரித்திரத்திலேயே இப்படி ஒரு வசூலையும் மக்கள் கூட்டத்தையும் பார்த்ததில்லை என்கிறார்கள். இதுவரை கிட்டத்தட்ட 19 கோடி ரூபாய் வரை அங்கு கபாலி வசூலித்துள்ளது. இந்த வார இறுதியில் ரூ 22 கோடியைத் தாண்டிவிடும் என்கிறார்கள். கோவை மற்றும் திருப்பூர் பகுதிகளில் இப்போதும் 90 அரங்குகளில் கபாலி ஓடிக் கொண்டிருக்கிறது.
இன்றிலிருந்து மேலும் சில அரங்குகளில் கூடுதலாகவும் திரையிடவிருக்கிறார்கள்.
கோவை பகுதி உரிமையை கலைப்புலி தாணு ரூ 13 கோடிக்குக் கொடுத்திருந்தார். இந்தப் பகுதியில் அந்த 13 கோடியை முதல் மூன்று நாட்களிலேயே எடுத்துவிட்டனர்.
தமிழகத்தின் பிற பகுதிகளிலும் கபாலி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கிறது. வட மாவட்டங்களில் இதுவரை எந்த ரஜினி படமும் வசூலிக்காத பெரும் தொகை வசூலாகியுள்ளது.
தமிழகம் முழுவதிலும் முதல் வார நிலவரப்படி கபாலி ரூ 74 கோடிகளைக் குவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











