பாகுபலியை விட கபாலி பெரிய படம்... ஏன் தெரியுமா? - கலைப்புலி தாணு
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்திருப்பதால் பாகுபலியை விட பெரிய படமாக வெளியாகிறது கபாலி என்று தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தெரிவித்துள்ளார்.
பா. இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் வருகிற 22-ம் தேதி வெளியாகிறது.

உலகெங்கும் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது. கபாலி வெளியீட்டை ஒரு திருவிழாவாகக் கொண்டாடி வருகின்றனர் ரசிகர்கள்.
படத்தின் வசூல் குறித்து தாணு ஒரு பேட்டியில், "உலகெங்கும் 5000-க்கும் அதிகமான திரையரங்குகளில் கபாலி வெளியாகிறது. படவெளியீட்டுக்கு முன்பு ரூ.200 கோடி அளவுக்கு வியாபாரம் ஆகியுள்ளது. வெளியீட்டுக்குப் பின்பு ரூ. 500 கோடி வசூலிக்கும் என்று எண்ணுகிறேன்.
கபாலி, பாகுபலியை விடவும் பெரிய படம். காரணம், ரஜினி. எல்லா வயதிலும் அவருக்கு மட்டும்தான் ரசிகர்கள் உலகெங்கும் உள்ளார்கள்.

நான் இன்னமும் படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை விற்கவில்லை. படவெளியீட்டுக்காகக் காத்திருக்கிறேன்.
கேரள உரிமையை மோகன்லால் வாங்கியது நானே எதிர்பாராதது. இதற்காகவே மோகன்லால் ரசிகர்கள் இந்தப் படத்தைப் பார்ப்பார்கள். கேரளாவில் முதல் முறையாக அதிக திரையரங்குகளில் வெளியாகும் படம் கபாலிதான். நேரடி மலையாளப் படத்தை விட அதிக அரங்குகள்.
அடுத்ததாக ஹாலிவுட் படம் தயாரிக்க உள்ளேன். டிசம்பரில் இதன் அறிவிப்பு வெளியிடப்படும்," என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











