கபாலி 217 வது நாள்... உண்மையில் ஓடியதா? லாபமா? என்ன சொல்கிறார் தியேட்டர் உரிமையாளர்!
ரஜினி நடித்த கபாலி தொடங்கி, சமீபத்தில் வெளியான சூர்யாவின் சிங்கம் 3 படம் வரை எந்தப் படமும் லாபம் தரவில்லை.. கதற வைக்கும் அளவுக்கு நஷ்டம் என்று திருப்பூர் சுப்பிரமணியம் பேசியதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளார் மதுரை விநியோகஸ்தரும், மணி இம்பாலா திரையரங்கங்களின் உரிமையாளருமான மணி வர்மா.
திருப்பூர் சுப்பிரமணியன் ஒரு வாட்ஸ் ஆப் ஆடியோவில், " கபாலி' படத்தால் நஷ்டம்தான் ஏற்பட்டது. ஆனால், 50 நாள், 75 நாள், 100 நாள், 150 நாள், 175 நாள், 200 நாள் என ஓடாத படத்திற்கு விளம்பரம் செய்வது நியாயமா? 'கபாலி' படம் பற்றிய உண்மை நிலவரத்தை ரஜினிகாந்திடம் சொன்னீர்களா? என்றெல்லாம் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணுவைக் கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கபாலி படத்தின் மதுரை விநியோகஸ்தர், இம்பாலா தியேட்டர் உரிமையாளர் மணிவர்மா ஒரு வாட்ஸ் அப் ஆடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அதில், "நான் மணிவர்மா, மதுரை மணி இம்பாலா மல்டிபிளக்ஸ் உரிமையாளர். திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் பதிவை சற்று முன் கேட்டேன். சின்ன மன வருத்தம். அதற்காகத்தான் இதைப் பதிவு செய்கிறேன்.
'கபாலி' படத்தின் 50 நாள், 100 நாள், 175 நாள், 200 நாள் இதெல்லாம் பொய்யான விளம்பரம் என சொல்லியிருந்தார்.'கபாலி' படம் இன்று 217வது நாள், இன்று கூட மார்னிங் ஷோ 47 டிக்கெட் போயிருக்கு. படம் ரெகுலரா போயிட்டிருக்கு. நீங்க சொன்ன கருத்து தாணு சாரையும், ரஜினி சாரையும் சற்று களங்கப்படுத்துவது போலிருந்தது. நீங்களும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்தான், நானும் ஒரு வினியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர். லாபம், நஷ்டம்கறது ஒரு தொழில்ல இருக்கிறது சகஜம்தான். குறிப்பிட்ட சிலரோட பேரைச் சொல்லி குரூப்புல பதிவு பண்றது எனக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கு. 'கபாலி' படம் மிகப் பெரும் வெற்றிப் படம். மதுரை ஏரியாவில் எனக்கு பெரும் வெற்றியையும், லாபத்தையும் தந்த படம் 'கபாலி'தான்," எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











