அப்போ கொலவெறி.. இப்போ நெருப்புடா.. தமிழே தெரியாதவர்கள் வாயிலும் உச்சரிக்கப்படும் வார்த்தை
சென்னை: தனுஷ் நடிப்பில் அவரது மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான திரைப்படம் '3'. 2012ல் வெளிவந்த இந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால், அப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடல் இந்தியா மட்டுமின்றி கடல் கடந்தும் அனைவர் வாயிலும் உச்சரிக்கப்பட்டது.
ஒய் திஸ் கொலவெறி.. என்று தொடங்கும் அந்த பாடல் தனுஷுக்கும், இசையமைப்பாளர் அனிருத்துக்கும் தேசிய அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது.
கோபம் என்பதற்கு கொலைவெறி என்ற வார்த்தை பதத்தை போட்டு வட இந்திய பத்திரிகைகள் கூட செய்திகள் வெளியிட்டன. ஆங்கில பத்திரிகைகளும் அந்த வார்த்தையை தலைப்பு செய்திகளில் பயன்படுத்தின.

கொலவெறி விளக்கம்
டிக்ஷனரியில் அர்த்தப்படுத்தப்பட்ட வார்த்தையில்லை என்பதால், கொலவெறி என்றால் சரியான அர்த்தம் என்ன என்று பிற மொழி மக்கள் தமிழ் மக்களிடம் கேட்டு தெரிந்து கொண்டனர். "கொலை செய்யும் அளவுக்கு ஏற்படும் கோபமே, கொலவெறி.." என்று முத்தமிழ் வளர்த்த தமிழர்கள், பிற மொழியினருக்கு விளக்கம் அளித்து புழகாங்கிதம் அடைந்து கொண்டனர்.

அதிக வீச்சு
இந்த அளவுக்கு தமிழ் வார்த்தை ஒன்று அதற்கு முன்பு பிரபலமானது கிடையாது. அனிருத் இசையின் மெட்டு அந்த பாடலை அதிகம் பேருக்கு ரீச் செய்ததும், அதன் ஆங்கில வார்த்தைகளும் இந்த வீச்சுக்கு காரணமாக இருந்தது.

நெருப்புடா
4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ஒரு தமிழ் வார்த்தை பாரதத்தின் பட்டி தொட்டியெல்லாம் ஆளுகிறது. அந்த வார்த்தை வேறு எதுவுமல்ல, கபாலி திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில் இடம் பெற்றுள்ள "நெருப்புடா..".

ரஜினி பவர்
ரஜினியின் கரிஷ்மா அந்த வார்த்தைக்கு உயிர் கொடுத்துள்ளது. கபாலி முன்னோட்டம் பல கோடிபேரால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது. எனவே நெருப்புடா.. என்ற வார்த்தையும் அத்தனை கோடி பேருக்கு, சென்று சேர்ந்துள்ளது.

அர்த்தமா முக்கியம்
அர்த்தமே தெரியவில்லை என்றாலும் பிற மொழியர்களும், ஆளாளுக்கு வாயில் நெருப்புடா.. என பாடுவதையும், சோஷியல் நெட்வொர்க்கில் ஆங்கிலத்தில் அந்த வார்த்தையை பயன்படுத்துவதையும் பார்க்க முடிகிறது. மருமகன் செய்த சாதனையை, மாமனார் ரஜினி விஞ்சிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.


Click it and Unblock the Notifications











