கபாலி அப்டேட்: 2 சர்வதேச வில்லன்களுடன் மோதும் ரஜினி
சென்னை: கபாலியில் தைவான் மற்றும் மலேசியா நாட்டைச் சேர்ந்த 2 சர்வதேச வில்லன்களுடன் இணைந்து ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.
கபாலி படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. ராதிகா ஆப்தே, தன்ஷிகா, தினேஷ்,கலையரசன் மற்றும் பல்வேறு நட்சத்திரங்கள் ரஜினியுடன் இணைந்து நடித்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன்னர் நடிகர் ஜெட் லீ இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின. ஆனால் இயக்குநர் ரஞ்சித் இதற்கு மறுப்புத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கபாலியில் வில்லனாக நடிப்பவர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த வின்ஸ்டன் சோ மற்றும் மலேசியாவைச் சேர்ந்த ரோஷ்யம் நோர் ஆகிய இருவரும் இதில் வில்லனாக நடிக்கவிருக்கின்றனர்.
வின்ஸ்டன் சோ பிரதான வில்லனாக நடிக்க, மற்றொரு வில்லனாக ரோஷ்யம் நோரை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.
தற்போதைய நிலவரப்படி ரஜினி இருவருடனும் மோதும் காட்சிகளை ஈசிஆரில் வைத்து எடுக்க ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறாராம்.இதில் வின்ஸ்டன் சோ நடிகர் ஜாக்கி சானுடன் இணைந்து நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











