கபாலி வர்றார்... தள்ளிப் போன மற்ற படங்கள்!
ரஜினிகாந்தின் கபாலி படம் வரும் 22-ம் தேதி வெளியாவது உறுதியாகிவிட்டதால், மற்ற படங்கள் அனைத்தும் இரண்டு வாரங்களுக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளன.
தமிழ் சினிமாவில் இதுவரை எந்தப் படமும் ஏற்படுத்தாத தாக்கத்தையும் எதிர்ப்பார்ப்பையும் கபாலி ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பாட்ஷா, சிவாஜி, எந்திரனுக்குக் கூட இந்த அளவு உச்சபட்ச பரபரப்பும் எதிர்ப்பார்ப்பும் இருந்ததில்லை.

கபாலி ரிலீஸ் தேதியை வைத்துதான் தங்கள் படங்களை எந்தத் தேதியில் வெளியிடலாம் என்பதை மற்ற தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கபாலி ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என சில பத்திரிகைகள் முதலில் செய்தி வெளியிட்டதை நம்பி, சிலர் அதற்கு முன் தங்கள் படங்களை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இப்போது ஜூலை 22-ல் கபாலி ரிலீஸ் உறுதி என்பதால் எல்லோரும் தங்கள் படங்களை கபாலி வெளியான இரு வாரங்களுக்குப் பிறகு வெளியிடத் தீர்மானித்துள்ளனர். காரணம் அதுவரை அனைத்து திரையரங்குகளும் கபாலிக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.
சென்னையில் மட்டும் 60-க்கும் அதிகமான திரைகளில் கபாலிதான் வெளியாகிறது. இவை தவிர சென்னையில் உள்ள முக்கியமான ப்ரிவியூ திரையரங்குகளும் கபாலிக்காக ரிசர்வ் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக பிரசாத் லேப் தியேட்டர் ஒன்றரைக் கோடி ரூபாயில் புதுப்பொலிவோடு தயாராகிக் கொண்டிருக்கிறது. இங்கு வெளியாகவிருக்கும் முதல் படமே கபாலிதான்!
ஜூலையிலேயே வந்திருக்க வேண்டிய படம் தனுஷ் நடிப்பில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்திருக்கும் தொடரி. ஆனால் கபாலிக்காக ஆகஸ்ட் 15க்கு தள்ளிப் போய்விட்டது அந்தப் படம். வாகா, நாயகி போன்ற படங்களும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்துக்கு தள்ளிப் போடப்பட்டுள்ளன.
தமிழ்ச் செல்வனும் தனியார் அஞ்சலும், ஒன்பதிலிருந்து பத்து வரை, சும்மாவே ஆடுவோம் போன்ற படங்களை இந்த வாரமே வெளியிடுகிறார்கள். கபாலிக்காக இரண்டு ஹாலிவுட் படங்களும் தள்ளிப் போகின்றன என்பது இன்னொரு ஹைலைட்!


Click it and Unblock the Notifications











