'ரஜினியை முழுமையாக பார்த்தேன்' - கலிஃபோர்னியாவிலிருந்து ஒரு 'மகிழ்ச்சி' விமர்சனம்!
சான் ஃப்ரான்சிஸ்கோ(யு.எஸ்): அமெரிக்காவில் இது வரையிலும் எந்த இந்தியப் படங்களும் செய்யாத வரலாற்றுச் சாதனையை கபாலி நிகழ்த்தி வருகிறது. முதல் இரண்டு தினங்கள் திட்டமிட்டே எதிர்மறை விமர்சனங்கள் வந்த நிலையில், தற்போது ரஜினி ரசிகர் அல்லாதவர்களும் படத்தைப் பற்றி பாஸிட்டிவான கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
கணிணித் துறை வல்லுனரும், சிறந்த ஓவியரும், வளைகுடா தமிழ் மன்றத்திலிருந்து வெளிவரும் 'விழுதுகள்' இதழின் ஆசிரியருமான உதய பாஸ்கர், தனது கபாலி அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார்.

பாடலாசிரியர் உமாதேவியையும் வெகுவாக பாராட்டியுள்ளார்.
அவரது விமர்சனம் இதோ...
"நான் ரொம்ப லேட் ... இப்பத்தான் கபாலி படம் பார்த்துவிட்டு வந்தேன். நீண்ட நாளைக்குப் பிறகு
ஒரு நல்ல படம் பார்த்த 'மகிழ்ச்சி'!
கபாலியைப் பற்றி பலபேர் பிரிச்சி மேஞ்சிட்டாங்க அவங்க எல்லோருக்கும் ஒரு நன்றி! அதனால்தான், வழக்கமா ரஜினி படத்தை முதல் நாள் முதல் காட்சின்னு பார்க்கிற ரசிகனாய் இல்லாமல், ஒவ்வொரு காட்சியையும் வசனத்தையும் ரஜினியின் நடிப்பையும் ஒன்றிப்போய் பார்த்த உணர்வு.
இப்படி, படம் பார்த்து, அதுவும் ரஜினி படத்தை இப்படிப் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டது. முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை என்று மகேந்திரன் படத்தில் மட்டுமே பார்த்த ரஜினியை முழுமையாக இந்தப் படத்தில் பார்த்தேன்!
இப்படி ஒரு படம் கொடுத்ததற்கு 'மகிழ்ச்சி' ரஞ்சித்!
மற்றபடி, எல்லோரும் அலறுகிற மாதிரி படம் இல்லை. ஒவ்வொருத்தரும் ரஜினின்னா இப்படித்தான் என்று மனதில் ஒரு பிம்பத்தை வைத்து இருக்கின்றனர். ராஜாதி ராஜா, தர்மதுரை போன்ற படங்கள் வந்த நேரத்தில், என் நண்பன் இப்படிச் சொன்னதுண்டு: 'ரஜினி எதுக்கு நடிக்கணும்? வந்து நின்னா நூறுநாள், தலையை அப்படிக் கோதினா இன்னொரு நூறுநாள்!'
இந்த பிம்பத்தை ரஜினி பல முறை உடைக்க முயற்சித்து இருக்கிறார். முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை, ஸ்ரீராகவேந்திரர், நல்லவனுக்கு நல்லவன் போன்ற படங்கள் எல்லாம் இப்படிப் பட்டவைதான்.
பாயும் புலி படத்திற்குப் பிறகு தம்பிக்கு எந்த ஊரு ரஜினியை வேறு தளத்திற்குக் கொண்டு சென்றது. பாட்ஷா படத்திற்குப் பிறகு அந்தப் பிம்பத்தை ஊதி பெரிதாக்கி விட்டனர். இப்போது, கபாலி அந்தப் பிம்பத்தை முழுமையாக உடைத்திருக்கிறது. அவ்வாறு உடைத்த படத்தில் புரட்சிகர உரையாடல்கள் பலரை நெருடிவிட்டது.
நல்ல படம் என்று சொல்வதைத் தவிர, இதில் தலை கனத்துப் போய் வெளியே வந்தோம் என்று சொல்லுமளவு ஒன்றுமில்லை. எனவே, குறைஞ்சது இன்னும் இரண்டு மூன்று முறையாவது கபாலி பார்க்கலாம் என்று இருக்கிறேன்.
கபாலி விளம்பரம், ஜாஸ் சினிமாஸின் அட்டகாசம் ஆகியவற்றைப் பற்றித் திட்டவேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாகத் திட்டட்டும். ஆனால், அதற்காக ஒரு நல்ல படைப்பில் வரும் உரையாடல்களை 'கிளாஸ் எடுக்கிறாங்க' என்று சொல்வதெல்லாம் ரொம்ப ஓவர்.
படையப்பாவில் ரஜினி 'பொம்பளைன்னா அடக்கமா ஒடுக்கமா இருக்கணும்'என்று பேசினாத்தான், 'கிளாஸ் எடுக்கிறது' என்று பொருள். இதில் வரும் உரையாடல்கள் 'சமூகத்தின் வலி.' அதுவும் அந்த வசனங்கள் சூப்பர் ஸ்டாரிடம் இருந்து வருவது இன்னும் வலிமை கூட்டுகிறது.
மேலும், மனதை மயக்கிய 'மாயநதி' பாடலை கு.உமாதேவி எழுதியிருக்கிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு தேனீபோல் கவிதைகளைத் தேடித்தேடிப் படித்தபோது இவரின் கவிதையையும் படிக்க நேர்ந்தது. இவரின் இந்த வரிகள் என்னை மிகவும் பாதித்தவை:
"உடல் கனக்கும் உறுப்புகளை
வெட்டியெறிந்து விட்டு
கொஞ்சம் கவிதைகளோடு
வாழலாமென்றாலும்
பறையதிர்வில் கனன்றெரியும் தோள்களைப்போல்
வீங்கித் தவிக்கிறது மனசும்
அவர்களின் தூரமும்...."
அப்போது முனைவர் பட்டம் பெறப் படித்துக்கொண்டிருந்தார். இப்போது பாடலாசிரியர் முனைவர் கு.உமாதேவி. மேன்மேலும் வெற்றிபெற வாழ்த்து பாவாணி!


Click it and Unblock the Notifications











