கடலூரில் 650 பள்ளி மாணவிகளுக்கு கபாலி சிறப்புக் காட்சி
கடலூர்: கடலூரில் அரசு சேவை இல்லப் பள்ளி மாணவிகளுக்கு கபாலி திரைப்படம் தனிக் காட்சியாக திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை திரையிடப்பட்டது.
கபாலி படம் வெளியான முதல் மூன்று நாட்கள் பல்வேறு தனியார் நிறுவனங்கள், கார்ப்பொரேட் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பை அளித்து, டிக்கெட்டுகளையும் இலவசமாக வழங்கின. இதனால் அறிவிக்கப்படாத விடுமுறை தினங்களாக மாறின கபாலி வெளியான முதல் மூன்று நாட்கள்.
திங்கள் கிழமைக்குப் பிறகு குடும்பம் குடும்பமாக இந்தப் படத்தைப் பார்த்து வருகின்றனர். பல்வேறு சமூக நல அமைப்புகள் தங்கள் இல்லங்களில் தங்கியுள்ள மாணவிகள், ஆதரவற்ற குழந்தைகளுக்கு இந்தப் படத்தைக் காட்டி வருகின்றன.

கடலூர் மாவட்ட சமூக நலத் துறை கட்டுப்பாட்டின் கீழ், கடலூர் செம்மண்டலத்தில் அரசு சேவை இல்லப் பள்ளி செயல்பட்டு வருகிறது. மேல்நிலைப் பள்ளியான இங்கு சுனாமியால் பாதித்தோரின் குழந்தைகள், பெற்றோர், ஆதரவற்றோர் இல்லாத குழந்தைகள், பொருளாதாரத்தில் மிகவும் நலிந்த நிலையில் உள்ளவர்களின் குழந்தைகள் என சுமார் 150 பேர் வரை பயில்கின்றனர்.
மேலும், இங்குள்ள தங்கும் விடுதியில் சுமார் 500 பேர் தங்கி, நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில், கடலூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள திரையரங்கில் ஞாயிற்றுக்கிழமை காலை சேவை இல்லத்தில் தங்கிப் பயின்று வரும் சுமார் 650 மாணவிகளுக்காக சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதற்காக, சேவை இல்லத்திலிருந்து மாணவிகள் அழைத்து வரப்பட்டனர். மேலும், விடுதிக் காப்பாளர்களும், ஆசிரியர்களும் உடன் சென்று திரைப்படம் பார்த்து மகிழ்ந்தனர்.


Click it and Unblock the Notifications











