கடன்...வைரமுத்துவின் நாட்படு தேறலின் ஏழாம் பாடல் மே 29 ம் வெளியீடு
சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறலில் இரண்டாம் பாகத்தில் கடன் என்ற தலைப்பில் அடுத்த பாடல் மே 29 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த வித்தியாசமான பாடல் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் சினிமாவில் 7500 பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து, தனது புதிய முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல்கள் எழுதி வருகிறார். தனது வரிகளில் 100 பாடல், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 டைரக்டர்கள் என நாட்படுதேறல் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகம் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் தற்போது நாட்படு தேறலின் இரண்டாம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் 6 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஏழாவது பாடல் கடன் என்ற தலைப்பில் மே 29 ம் தேதி வெளியிடப்பட உள்ளது. இசையருவி சேனலில் பகல் 1.30 மணிக்கும், கலைஞர் டிவியில் மாலை 5.30 மணிக்கும் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது.
ஆடு மேய்க்கக் கடன் வாங்கினான் ஒரு கிராமத்து கிழவன். ஆட்டை அவன் மேய்த்தான் வட்டி அவனை மேய்ந்தது. கடன் வாங்கி வாங்கிக் காலொடிந்ததுதான் வங்கி ஆயிற்றோ என கவிஞர் வைரமுத்து ட்வீட் போட்டுள்ளார். இதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். நாட்டுப்புற பாணியில் ஆடு மேய்ப்பவர் துன்பம் கூறியது அருமை. உங்களால் மட்டுமே காதலில் இருந்து கடனாளியின் கஷ்டம் வரை பாட இயலும் ஐயா என பலர் பாராட்டி வருகின்றனர்.
கடன்பட்ட கதையை மண்மனம் மாறாத சோகத்தோடு பதிவிட்டிருக்கும் கடன் சுமை நெஞ்சில் பாரமாய் அழுத்துகிறது. காட்சியும் வாழ்வியல் சாட்சியும் பிரம்மாண்டமாய் விரிகிறது வெள்ளித்திரையில். கவிப்பேரரசின் அற்புதமான கவிதை. கிராமத்து பாணியில் வைரமுத்து எழுதி உள்ள வரிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











