திரைத் துளி
தமிழ் படங்களுக்கு ஆங்கிலப் பெயர் வைத்தால் தமிழ் விரோதிகள் என்பதா என்று கஜினி பட இயக்குநர் முருகதாஸ் ஆவேசமாகக்கேட்டுள்ளார்.
சூர்யா, கல்பனா ஜோடியாக நடிக்கும் படம் கஜினி. அஜீத்தை வைத்து தீனா படத்தை இயக்கிய முருகதாஸ் தான் கஜினி படத்தைஇயக்குகிறார். இதன் பூஜை ஏவி.எம். ஸ்டுடியோவில் நடந்தது.
நடிகர் தனுஷ் தனது மனைவி ஐஸ்வர்யாவுடன் கலந்து கொண்டார். திருமணத்திற்குப் பின் இவர்கள இருவரும் சேர்ந்து கலந்து கொள்ளும்முதல் பொது நிகழ்ச்சி இதுவாகும்.
விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகரும், ஐஸ்வர்யாவும் குத்துவிளக்கேற்றி படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தனர்.
பூஜைக்குப் பின்னர் முருகதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழ்ப் படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைப்பதற்கு எதிர்ப்புதெரிவிப்பது நியாயமல்ல. இது துரதிர்ஷ்டவசமானது.
தமிழ், தமிழ் என்று கூறும் சிலர் தங்களது பிள்ளைகளை கான்வென்ட்டில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள். படைப்பாளிகள் யாருக்கும்கட்டுப்பட்டவர்கள் அல்லர், அவர்களுக்கு முழு சுதந்திரம் வேண்டும். அவர்களது சுதந்திரத்தில் யாரும் குறுக்கிடக் கூடாது.
ஆறு கோடி தமிழர்களுக்கும், எங்களைப் போன்ற திரையுலகினருக்கும் வழிகாட்டியாக வாழ்ந்த எம்ஜிஆரை யாராவது மலையாளிஎன்பதற்காக எதிர்த்ததுண்டா? எதிர்க்கத்தான் முடிந்ததா?
படங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் உடனே தமிழ் விரோதிகள் என்று கூறுவதா? நான் தமிழன். அந்த உணர்வு எனக்கும்இருக்கிறது. தமிழை வளர்க்க எவ்வளவோ வழிகள் உள்ளன, அதை விடுத்து சினிமாக்காரர்கள் மீது பாய்வது சரியல்ல.
எனது படங்களில் ஹீரோ சிகரெட் பிடிப்பது போன்ற காட்சிகளை நான் ஒருபோதும் வைக்க மாட்டேன்.
ரமணாவிற்குப் பிறகு ஒரு சிறிய இடைவெளி விட்டு இந்தப் படத்தை இயக்குகிறேன்.
எனது கஜினி பட நாயகனின் பெயர் சஞ்சய் ராமசாமி. மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து அமைதியாக தொழிலைப் பார்க்கிறார். ஒருகட்டத்தில் துப்பாக்கியை கையில் எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
விடாமுயற்சியால் வெற்றி பெற்றவன் கஜினி. எனது கதாநாயகனும் அப்படிப்பட்டவன்தான். அதனால் இந்தப் பெயர் வைத்துள்ளேன்.
மிகவும் வித்தியாசமான கதை இது. தமிழில் தயாரிக்கப்டும் ஹாலிவுட் ஸ்டைல் படமாகவும் இருக்கும். சண்டைக் காட்சிகள் மட்டுமல்ல,ரொமான்ஸ் காட்சிகளும் ஹாலிவுட் தரத்தில் இருக்கும்.
ஆனால் முத்தக் காட்சிகள் இருக்காது. இந்தப் படத்தில் முதலில் அஜீத் நடிப்பதாக இருந்தது. ஆனால் அவரது கால்ஷீட்டுக்காக 6 மாதம்காத்திருக்க வேண்டியிருந்ததால் சூர்யாவை வைத்து தொடங்கி விட்டேன்.
அடுத்த படத்தை அஜீத்தை வைத்து இயக்குவேன்.
இந்தப் படத்தின் ஹீரோயினின் பெயர் கல்பனா. இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லாவின் நினைவாக அவருக்கு கல்பனாஎன்று பெயர் சூட்டியுள்ளோம் என்றார் முருகதாஸ்.
பூஜையில் சூர்யா, சிவக்குமார், பாய்ஸ் பரத், சத்யன், இயக்குநர்கள் ஹரி, கெளதம் மேனன், ஆர்.சுந்தரராஜன், மனோபாலா, ஜெயம் ராஜாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Click it and Unblock the Notifications











