கலாபவன் மணி மர்ம மரணம்.. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கேரள முதல்வரிடம் கோரிக்கை!
கொச்சி: நடிகர் கலாபவன் மணியின் மர்ம மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
மலையாள, தமிழ் நடிகரான கலாபவன் மணி திருச்சூரில் உள்ள பண்ணை இல்லத்தில் கடந்த மார்ச் 6-ஆம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவரது உடலில் உயிரைக் கொல்லும் பூச்சிகொல்லி கலந்திருந்ததாக கொச்சி ஆய்வகத்தில் நடத்தப்பட்ட உடல்கூறு பரிசோதனை முடிவில் தெரிவிக்கப்பட்டது.

அண்மையில் ஹைதராபாத் உள்ள ஆய்வகம் வெளியிட்ட அறிக்கையில் கலாபவன் மணியின் ரத்தத்தில் விஷம் கலந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் அருந்திய மதுவில் விஷம் இருந்திருக்கலாம் என்று தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் கலாபவன் மணியின் குடும்பத்தினர் கேரள முதல்வர் பினராயி விஜயனை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினர். அப்போது கலாபவன் மணி மரணம் குறித்து மாநில போலீஸார் நடத்தி வரும் விசாரணையில் தங்களுக்கு நம்பிக்கை இல்லையென்றும், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் முதல்வரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Click it and Unblock the Notifications











