கலாபவன் மணி மரணத்திற்கு மாமனார் காரணமா?... விசாரணையில் திடீர் திருப்பம்
திருவனந்தபுரம்: கலாபவன் மணியின் மரணத்திற்கு அவரது மாமனார் காரணமாக இருக்கலாம், என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.
மலையாள நடிகர் கலாபவன் மணியின் மரணம் தற்கொலையா? இல்லை திட்டமிட்ட கொலையா? என்று கேரள போலீஸ் விசாரித்து வருகிறது.
இதற்காக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மாமனார்
மணியின் மரணத்திற்கு அவரது உடலில் இருந்த பூச்சிகொல்லி மருந்துதான் காரணம் என்பது, பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் மணியின் மாமனார் சுதாகரன் கடையில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கியதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது தான் விவசாயம் செய்யவே அந்த மருந்துகளை வாங்கியதாக சுதாகரன் தெரிவித்திருக்கிறார்.

குளோரோபைரிபோஸ்
மணியின் உடலில் கண்டறியப்பட்ட குளோரோபைரிபோஸ் பூச்சிகொல்லி மருந்தும் அவரது மாமனார் வாங்கியதாக கூறப்படும் மருந்தும் ஒன்றுதானா? என்பது உறுதி செய்யப்படவில்லை. இது தொடர்பாக அவரது மாமனாரிடம் பலமுறை விசாரணை நடத்தியும், போதுமான தகவல்களைப் பெற முடியவில்லை என்று கூறப்படுகிறது.

யாருக்கு லாபம்
மற்றொருபுறம் மணியின் மரணத்தால் யாருக்கு லாபம்? என்றும் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது. 12 வீடுகள் மற்றும் ஏக்கர் கணக்கிலான நிலங்களுக்கு மணி சொந்தக்காரராக இருந்துள்ளார். எனினும் அவரது பெயரில் 1.5 கோடிகள் மட்டுமே வங்கி இருப்புத் தொகையாக இருந்துள்ளது.

சொத்துக்கள்
சொத்துக்கள் மணியின் பெயரில் இருந்தாலும் கூட கொடுக்கல், வாங்கல் விவரங்கள் அனைத்தும் அவரது மாமனார் பெயரிலேயே இருந்துள்ளன.
முதலில் மணியின் மனைவி பெயரில் இருந்த சொத்துக்கள், நாளடைவில் அவரது மாமனார் மேற்பார்வைக்கு வந்துள்ளன. சந்தேகத்தின் பெயரில் மாமனார் சுதாகரன், மனைவியின் உறவினர் மற்றும் மணியின் நெருங்கிய நண்பர் விபின், ஆகியோரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மன அழுத்தம்
இறப்பதற்கு முன் மணி கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாக, அவரது உதவியாளர்கள் விபின், முருகன், மற்றும் அருண் ஆகியோர் கூறியுள்ளனர். கல்லீரல் தொடர்பான சிகிச்சைக்குப் பின்னர் மணி மிகுந்த மன அழுத்தத்தை சந்தித்ததாகவும், தங்களை வேறு வேலைக்கு செல்லும்படி அவர் கூறியதாகவும் இம்மூவரும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். எனினும் உதவியாளர்கள் மூவரையும் மணி வேறு வேலை தேடச் சொன்னதற்கு வேறு ஏதாவது காரணம் உண்டா? என்ற ரீதியிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
6 தனிப்படை அமைத்தும் மணியின் மரணத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பது, காவல்துறைக்கு மிகுந்த நெருக்கடியைக் கொடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications











