சினிமாவில் போலிகள் அதிகமாகி விட்டார்கள்: ஏ.ஆர்.முருகதாஸ்
சென்னை: சினிமாவில், நன்றியுணர்வு குறைந்து விட்டதாகவும், போலிகள் அதிகமாகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ்.
ரிச்சர்ட், பார்த்தி, ஐஸ்வர்யா நடித்து, ஜெயப்ரதீப் டைரக்டு செய்து, எஸ்.தாணுவின் வி கிரியேஷன்ஸ் வெளியிடும் படம், 'நேர் எதிர்.' இப்படத்தின் 'டிரைலர்' வெளியீட்டு விழா, சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப் தியேட்டரில் நடந்தது.
விழாவில் டைரக்டர்கள் சங்க தலைவர் விக்ரமன், செயலாளர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர்கள் பி.வாசு, ஏ.ஆர்.முருகதாஸ் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக, படத்தின் டிரைலரை பி.வாசு தலைமையில், ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட, கவுதம் வாசுதேவ் மேனன் பெற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து விழாவில் டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது:-

தலைப்பு முக்கியம்...
ஒரு படத்துக்கு தலைப்பு அமைவது, மிகவும் சிரமம். ‘நேர் எதிர்' என்ற தலைப்பு அனைத்து தரப்பினரையும் கவர்கிற தலைப்பு. இது, எனக்கு தோன்றாமல் போய்விட்டது.

விஜய் படம்....
நான், அடுத்து விஜய் படத்தை இயக்கப் போகிறேன். கதை எல்லாம் தயாராகி விட்டது. படப்பிடிப்புக்கு போகப்போகிறோம். ஆனால், தலைப்பு முடிவாகவில்லை.

இரண்டு வகை தயாரிப்பாளர்கள்....
நான் இயக்கிய ‘துப்பாக்கி' படத்தில், முதல் தோட்டா தயாரிப்பாளர் தாணு. தயாரிப்பாளர்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று அம்மா மாதிரி. இன்னொன்ரு அப்பா மாதிரி. அம்மா மாதிரி உள்ளவர்கள், பிள்ளையை வயிற்றில் சுமப்பதில் இருந்து கடைசி வரை அதைப்பார்த்துக் கொள்கிற மாதிரி, படம் உருவாகிறபோது உடன் இருந்து எல்லாவற்றையும் கவனித்துக் கொள்வார்கள்.

தாணு ‘அம்மா’ மாதிரி....
அப்பா மாதிரி இருப்பவர்கள் படத்தின் தொடக்க விழாவுக்கு வருவார்கள். இடையில் டாக்டரிடம் அழைத்து செல்வது, பிரசவம் ஆனதும் இனிப்பு கொடுப்பது போல் இருப்பார்கள். தாணு, அம்மா மாதிரியான தயாரிப்பாளர். ‘துப்பாக்கி' படத்துக்கு வந்த பிரச்சினைகளை எல்லாம் சமாளித்து வெற்றி கண்டவர்.

போலிகள்....
இப்போதெல்லாம் ஒரு படம் ஓடினால் கூட, அந்த படக்குழுவினர் சந்தித்துக் கொள்வதில்லை. ஒருவரையொருவர் பார்ப்பதே இல்லை. சினிமாவில் இப்போது நல்ல நட்பு, நல்ல உறவு, நன்றியுணர்வு ஆகியவை குறைந்து விட்டன. போலிகள் அதிகமாகி விட்டார்கள். சினிமாவில், உண்மையான மனிதர்கள் கிடைப்பது அரிதாக இருக்கிறது' என இவ்வாறு டைரக்டர் ஏ.ஆர்.முருகதாஸ் பேசினார்.


Click it and Unblock the Notifications











