'கலைஞரை'ச் சந்தித்த 'கலைப்புலி'!
சென்னை: திமுக தலைவர் கருணாநிதியை அவர் வீட்டுக்குப் போய் சந்தித்து உடல்நலம் விசாரித்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
கடந்த ஆண்டு உடல் நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் தொடர் சிகிச்சைப் பெற்ற கருணாநிதி, தீவிர அரசியலிலிருந்து விலகி ஓய்வெடுத்து வருகிறார். தொண்டையில் துளையிட்டிருப்பதால் அவரால் பேச இயலவில்லை.

இடையில் சில காலம் அவருக்கு நினைவு தப்பியிருந்தது. ஆனால் தற்போது நினைவு திரும்பியுள்ளது. தன்னைப் பார்க்க வருகிறவர்களை அடையாளம் கண்டு சிரிக்கிறார். வாழ்த்துகிறார். அவருக்கு பேச்சுப் பயிற்சி அளிக்கப்படுவதாகவும் விரைவில் வழக்கம் போல பேச ஆரம்பித்துவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அண்மையில் மதிமுக தலைவர் வைகோ கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவரை அடையாளம் கண்டதோடு, பழைய நினைவுகளில் கண்கலங்கினார்.

பிரதமர் நரேந்திர மோடியும் அண்மையில் கருணாநிதியைச் சந்தித்தார். மோடியைப் பார்த்துச் சிரித்து, வாழ்த்துக் கூறினார்.
நேற்று முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு கோபாலபுரம் சென்று கருணாநிதியைச் சந்தித்தார். தாணுவைப் பார்த்ததும் அடையாளம் கண்டு கொண்டார் கருணாநிதி. அப்போது அவரிடம், சில பழைய புகைப்படங்களை தாணு காட்டினார். ஒன்றில் ரஜினி, விஜயகாந்துடன் தாணு இருக்கும் படம். இன்னொன்று புதுப்பாடகன் இசை வெளியீட்டுக்கு கருணாநிதி, ரஜினி, விஜயகாந்த் மூவரின் பிரமாண்ட படங்கள் இடம்பெற்ற கட் அவுட் படம்.
அவற்றைப் பார்த்துச் சிரித்தார் கருணாநிதி. இந்தச் சந்திப்பு குறித்து கலைப்புலி தாணு கூறுகையில், "கலைஞருடன் எனக்குள்ள தொடர்பு 30 ஆண்டுகளுக்கும் மேலானது. அவரை இன்று நேரில் பார்த்தது மிகுந்த நெகிழ்ச்சியை அளித்தது. அவரிடம் நான் பழைய நினைவுகளை, நிகழ்வுகளைச் சொன்னபோது, சிரித்தபடி கேட்டுக் கொண்டார். அவர் பூரண நலத்துடன், அந்த பழைய கணீர் குரலுடன் மீண்டும் மேடையேறுவார்," என்றார்.


Click it and Unblock the Notifications











