கலகலப்பு 2: நயன்தாரா ரசிகர்களை ஏமாற்றிய குஷ்பூ
சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணையும் செய்தி உண்மையில்லை என குஷ்பூ தெரிவித்திருக்கிறார்.
2012 ம் ஆண்டு வெளியாகி வசூலைக் குவித்த படம் கலகலப்பு. விமல், அஞ்சலி, சிவா, ஓவியா, சந்தானம், மனோபாலா, கருணாகரன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே இப்படத்தில் நடித்திருந்தது.
தமிழ் சினிமாவில் 2 வது பாகங்களை எடுப்பது தற்போது அதிகமாகி வரும் சூழ்நிலையில், இப்படத்தின் 2 வது பாகத்தை எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியானது.
மேலும் சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா இணைந்து கலகலப்பு 2 வில் நடிக்கப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின.
இதனால் பாஸ் என்கிற பாஸ்கரன், ராஜா ராணி ஹிட்களுக்குப் பின் ஆர்யா-நயன்தாரா இணைந்து நடிக்கப் போகிறார்கள் என, ரசிகர்களும் உற்சாகமடைந்தனர்.
ஆனால் தயாரிப்பாளர் குஷ்பூ கலகலப்பு 2 குறித்து வெளியாகும் செய்திகள் உண்மையில்லை என விளக்கம் அளித்திருக்கிறார்.

இதுகுறித்து தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் "சுந்தர்.சி + ஆர்யா + நயன் = அதிரடி வெற்றி தான். ஆனால் கலகலப்பு 2 குறித்து வெளியாகும் செய்திகளில் துளியும் உண்மையில்லை.
ஏமாற்றத்திற்கு வருந்துகிறேன்" என்று தெரிவித்திருக்கிறார். குஷ்பூவின் இந்த விளக்கம் ஆர்யா மற்றும் நயன்தாரா ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றமாக அமைந்துள்ளது.
சுந்தர்.சி தற்போது 'வெள்ளிமூங்கா' மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில் நாயகனாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











