மருத்துவக் கழிவுகள் கொட்டும் குப்பைத் தொட்டியல்ல தமிழ்நாடு- கல்தா இயக்குநர் ஹரி உத்ரா
சென்னை: அண்டை மாநிலங்கள் தமிழ்நாட்டை தங்களுடைய குப்பைத் தொட்டியாக நினைத்துக்கொண்டு அவர்களுடைய மருத்துவக் கழிவுகளை சட்டவிரோதமாகவும் திருட்டுத்தனமாகவும் இங்கு கொண்டு வந்து கொட்டுகின்றன. இதற்கு இங்குள்ள சில அரசியல்வாதிகளும் உடந்தையாக உள்ளனர். இதனால் இங்குள்ள மக்கள் உடல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதை கல்தா திரைப்படம் விவரிக்கிறது.
தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்து விடவும் போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஹரி உத்ரா தனது மூன்றாவது படத்துக்கு கல்தா என்று பெயர் வைத்ததன் மூலம் மீண்டும் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் சார்பில் மலர்கொடி ரகுபதி, உஷா மற்றும் எஸ்.ஹரி உத்ரா இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் சிவா நிஷாந்த், மேற்கு தொடர்ச்சி மலை புகழ் ஆண்டனி, ஐரா, திவ்யா, கஜராஜ், எஸ்.எம்.டி.கருணாநிதி, காக்கா முட்டை சசி, சுரேஷ் முத்து வீரா, பழைய ஜோக் தங்கதுரை மற்றும் ராஜ சிம்மன் ஆகியோர் நடித்திருக்கின்றனர்.
இப்படம் குறித்து தயாரிப்பாளரும் இயக்குநருமான ஹரி உத்ரா கூறும்பொழுது, இத்திரைப்படம் மிகத் தீவிரமான ஒரு பிரச்னை குறித்து பேசுகிறது. அண்டை மாநிலங்கள் சட்ட விரோதமான முறையில் தமிழ்நாட்டில் கொண்டு வந்து கொட்டும் மருத்துவக் கழிவுகள் குறித்து இந்தப் படம் விவரிக்கிறது.
இதற்கு துணை நிற்கும் சில ஊழல் அரசியல்வாதிகளையும் தோலுரித்துக் காட்டத் தவறவில்லை. தாங்கள் எதனால் பாதிக்கப்பட்டோம் என்பதுகூடத் தெரியாமல் மக்கள் எந்த அளவுக்கு உடல்ரீதியாக பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்பதையும் இப்படத்தில் சுட்டிக்காட்ட முயன்றிருக்கிறோம்.
கே.ஜெய் கிருஷ் இசையமைக்கும் இப்படத்துக்கு பி.வாசு ஒளிப்பதிவு செய்ய, முத்து முனியசாமி படத்தொகுப்பை கவனிக்கிறார். கோட்டி சண்டைக் காட்சிகளையும், சுரேஷ் நடனக் காட்சிகளையும் அமைக்க, கலை இயக்குநர் பொறுப்பை ஏற்றிருப்பவர் இன்ப ஆர்ட் பிரகாஷ்.
படப்பிடிப்பில் புகைப்படம் எடுக்கும் பொறுப்பை பா.லக்ஷ்மண் ஏற்க, விளம்பர டிசைன்களை உருவாக்குகிறார் பிளஸன்ஸ். கவிப்பேரரசுவின் பாடல்களுக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையமைக்க செந்தில் ராஜலட்சுமி, கானா புகழ் இசைவாணி ஆகியோர் குரல் கொடுத்திருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீடு கடந்த அக்டோபர் 4ஆம் தேதியன்று குவைத் நகரில் நடைபெற்றது. இப்படத்தில் இடம்பெற்றுள்ள கண்ணான கண்ணுக்குள்ள எனும் பாடலை குவைத் கவிஞர் வித்யாசாகர் எழுதியுள்ளார். இப்பாடலை நமது சிறப்புக் கலைஞர்களான மண்ணிசைத் தம்பதியர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











