கவுதமியா.. மீனாவா?- கமலை 'டெலிகேட் பொஸிஸனில்' தள்ளிய கேள்வி!!
பாபநாசம் மற்றும் அதன் ஒரிஜினல் த்ரிஷ்யம் படங்களில் சிறப்பாக நடித்தவர் கவுதமியா, மீனாவா என்ற கேள்விக்கு சற்று சங்கடத்துடன் பதில் சொன்னார் கமல் ஹாஸன்.
நேற்று நடந்த பாபநாசம் வெற்றி விழாவில் பங்கேற்ற அவர் பேசுகையில், "இது ஒரு வித்தியாசமான விழா. இந்த விழாவை நடத்த வேண்டுமா? என யோசித்தேன். ஆனாலும், 40 நாட்களில் ஒரு நல்ல படம் கொடுத்துள்ளோம். தயாரிப்பாளரும் லாபம் அடைந்துள்ளார். எனவே வெற்றி விழாவை நடத்துவது ஏற்கத்தக்கதுதான்.

திருப்தி - நன்றி
சில படங்களில் வியாபார ரீதியாக சமரசம் செய்துகொள்வதுண்டு. ஆனால் ‘பாபநாசம்' படம் அப்படி அல்ல. எங்களுக்கு மன திருப்தியை அளித்துள்ள படம். இதை மக்களிடம் கொண்டு சென்ற பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

சிபாரிசு செய்தவர் மோகன்லால்தான்
என் படத்தை மட்டுமின்றி, நல்ல படங்களை தூக்கி பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். அப்போது தான் சிறந்த படங்கள் வர வாய்ப்பு ஏற்படும். ‘பாபநாசம்' படத்தை கொண்டாடும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
‘த்ரிஷ்யம்' படத்தை தமிழில் ‘ரீ-மேக்' செய்ய முடிவெடுத்ததும், இந்த படத்துக்கு கமல் ஹாசன் பொருத்தமாக இருப்பார் என்று மோகன்லால் கூறியுள்ளார். அவரது பெருந்தன்மைக்கும், பரிந்துரைக்கும் நன்றி தெரிவிக்கிறேன். படப்பிடிப்பு முடியும் வரை படக்குழுவினர் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டனர்.

தூங்காவனத்தில் தொடர்கிறார்கள்
படப்பிடிப்பு முடிந்து பிரியும்போது, கண்கள் நனைந்தது. இந்த படத்தில் நடித்த பலர் எனது அடுத்த படமான தூங்காவனம் படத்திலும் நடிக்கிறார்கள். அத்தனை பேருமே திறமையானவர்கள். என் கதாபாத்திரம் மட்டுமின்றி, மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக இருந்தால் தான் படம் வெற்றி பெறும். இந்த படத்தில் அது அமைந்தது. வியர்வைக்கு பரிசாக வெற்றி கிடைத்துள்ளது," என்றார்.

கவுதமியா மீனாவா?
அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகள்... அவர் சொன்ன பதில்கள்...
கேள்வி: த்ரிஷ்யம் படத்தில் மீனா நடித்தார். ‘பாபநாசம்' படத்தில் கவுதமி நடித்துள்ளார். இவர்களில் யார் சிறப்பாக நடித்து உள்ளனர்?
பதில்: கவுதமி சிறப்பாக நடித்து உள்ளார் என்றால் மீனா முகத்தை திருப்பி வைத்துக்கொள்வார். கவுதமியை தினமும் பார்க்கிறேன். இவரை சமாதானம் படுத்திவிடலாம். மீனாவுடன், நான் படங்கள் நடிக்க நேரும்போது சிக்கல் வரும். எனவே இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

காமராஜர், ஆதித்தனார் படங்கள்
கேள்வி: சுயம்புலிங்கம் வீட்டில் காமராஜர், ஆதித்தனார் படங்களை வைத்தது திட்டமிட்டு எடுத்ததா?
பதில்: ஆமாம் நிச்சயமாக அப்படி எடுக்கப்படதுதான். என்னுடைய 'தேவர்மகன்' படத்தில்கூட பெரியார், முத்துராமலிங்க தேவர் படங்களை மாட்டி வைத்து இருப்பேன்.

வரி விலக்கு தராதது நியாயம்தான்!
கேள்வி: ‘பாபநாசம்' படத்துக்கு வரிச்சலுகை அளிக்க மறுக்கப்பட்டதற்கு சொல்லப்பட்ட காரணம் சரிதானா?
பதில்: வரிவிலக்கு தராமல் இருப்பதற்கான காரணங்களை அவர்கள் இணைய தளத்தில் சொல்லி இருக்கிறார்கள். அதனை நானும் அப்படியே ஒப்புக் கொள்கிறேன்.

காவல் துறையின் கையில்
கேள்வி: ‘பாபநாசம்' படம் இணையதளத்தில் வெளியாகி விட்டதே?
பதில்:- திண்டுக்கல் பூட்டு செய்யும் போதே, சாவியையும் கண்டுபிடித்து விடுவார்கள். ‘பாபநாசம்' படத்தை இணையதளத்தில் வெளியிட்டும் நாசம் செய்துள்ளனர். அதை ‘டவுன்லோடு' செய்தும் பார்க்கிறார்கள். என்ன செய்வது.. இதைத் தடுப்பது காவல் துறையின் கையில் உள்ளது.

அறிவுரை கேட்கவில்லை
கேள்வி: நடிகர் சங்க விவகாரத்தில் பெரிய நடிகர்கள் அமைதியாக இருக்கிறீர்களே?
பதில்: என்னிடம் யாரும் அறிவுரை கேட்கவில்லை. அதனால் சொல்லவில்லை.


Click it and Unblock the Notifications











