இளையராஜா பாட.. கமல் இணைந்து பாட.. மீண்டும் "மருதநாயகம்"!
சென்னை: இசைஞானி இளையராஜாவைப் பாராட்டி நடந்த 'இளையராஜா 1௦௦௦' நிகழ்ச்சியில் மருதநாயகம் படத்தின் ஒற்றைப் பாடலை வெளியிட்டிருக்கிறார் கமல்.
நேற்று முன்தினம் சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற 'இளையராஜா 1௦௦௦' நிகழ்ச்சியை இறுதிவரை கண்டு ரசித்தவர்களுக்கு, ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது.

நிகழ்ச்சியின் இறுதியில் கமல் ரசிகர்கள் பல வருடங்களாக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும், மருதநாயகம் படத்தின் அறிவிப்பை இளையராஜாவுடன் இணைந்து கமல் வெளியிட்டார்.
மேலும் மருதநாயகம் படத்தின் ஆரம்பப் பாடல் ஒன்றை இளையராஜாவுடன் இணைந்து கமல் பாட, கூடியிருந்த ரசிகர்கள் மிகுந்த ஆராவாரத்துடன் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
அந்தப் பாடல் வரிகளை இங்கே காணலாம்:
பொறந்தது பனையூரு மண்ணு - மருத
நாயகம் என்பது பேர்களில் ஒண்ணு
வளர்ந்தது பகையோட நின்னு - இங்கு
தொடங்குது தொடங்குது சரித்திரம் ஒண்ணு
மதம்கொண்டு வந்தது சாதி - இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது..)
முப்புறம் எரிச்ச செவனே - இங்கு
எப்புறம் போனாலும் எரிவது என்னே
சாதிக்கோர் சமயம் சொல்வானே - தக்க
சமயத்தில் காக்கும் ஓர் சாதிசொல்வானா
இடப்பாகம் இருந்த நல்லாளை - கயவர்
இடுகாட்டுச் சோறாக்கி உலரவிட்டாரே
கண்ணீரில் நனையாத பூமி
யாரும் கண்ணில் காணத்தகுமோ
அது காணும் காலம் வருமோ
மதம்கொண்டு வந்தது சாதி - இன்றும்
மனுசனத் தொரத்துது மனுசொன்ன நீதி
சித்தங்கலங்குது சாமி - இது
ரத்தவெறி கொண்டு ஆடுற பூமி
(பொறந்தது)
லைகா நிறுவனம் மருதநாயகம் படத்தைத் தயாரிக்கும் என்று கமல் கூறினாலும், எப்போது தொடங்கப்படும் போன்ற விவரங்களை அவர் இன்னும் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











