பாபநாசம் ஒரு பார்வை
சென்னை: மலையாளத்தில் மோகன்லால் - மீனா நடிப்பில் 2013 ம் ஆண்டு வெளிவந்த திரிஷ்யம் படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது. படத்தின் வெற்றியைப் பார்த்து 2014 ம் ஆண்டு கன்னடத்தில் ரவிச்சந்திரன் - நவ்யா நாயர் ஆகியோரை வைத்து த்ரிஷ்யா என்ற பெயரில் படத்தை ரீமேக்கினார் இயக்குநர் வாசு.
வாசுவின் நம்பிக்கை வீண்போகவில்லை படம் கன்னடத்திலும் ஹிட்டடித்தது. இதைப் பார்த்த மனவாடுகள் சும்மா இருப்பார்களா அதே ஆண்டில் திருஷ்யம் என்ற பெயரில் நடிகை ஸ்ரீபிரியா வெங்கடேஷ், மீனா மற்றும் நதியாவை நடிக்க வைத்து படத்தை இயக்கினார். ஆந்திராவிலும் இந்தப் படமானது அபார வரவேற்பைப் பெற்று, வசூலைக் குவித்தது.
மூன்று மொழிகளிலும் வெற்றி பெற்ற இந்தப் படத்தை தமிழில் எடுத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணிய கமலஹாசன், மலையாளத்தில் இயக்கிய இயக்குநர் ஜீது ஜோசப்பையே தமிழிலும் இயக்கச் சொல்லி நடித்திருக்கிறார்.

திரிஷ்யம் படத்தின் கதை
மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரிஷ்யம் படம் ஒரு திரில்லர் படமாகும், கேபிள் டிவி நடத்திவரும் மோகன்லாலுக்கு மனைவியாக மீனா நடித்திருந்தார். இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள், இதில் மூத்த மகள் அஞ்சு முகாம் ஒன்றில் கலந்துகொள்ளும் போது சக மாணவன் வருண் அவள் குளிப்பதை வீடியோ எடுத்து விடுகிறான். வீடியோவை இன்டர்நெட்டில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் நீ என்னுடன் உறவு கொள்ள வேண்டும் என்று வருண் அஞ்சுவை வற்புறுத்த, வேறு வழியில்லாமல் அவன் கோரிக்கைக்கு இணங்குகிறாள் மோகன்லாலின் மூத்த மகள் அஞ்சு.
அவன் சொன்ன இடத்திற்கு மகள் செல்லும்போது அங்கு அவளின் அம்மா மீனா வந்துவிடுகிறார், என் மகளை விட்டுவிடு என்று வருணிடம் மீனா கெஞ்ச அப்படியானால் அவளுக்கு பதில் நீ வா என்று வருண் கூறுவான். இந்தப் பேச்சுவார்த்தையின் போது அஞ்சு ஒரு பெரிய இரும்புத் தடையை எடுத்து வருணின் தலையில் அடிக்க வருண் இறந்து விடுகிறான்.வருண் காவல் துறை உயரதிகாரி கீதா பிரபாகரின் பையன், அவனைத் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் புதைத்து விடுகின்றனர் மீனாவும், அஞ்சுவும்.
நடந்ததைக் கேட்கும் மோகன்லால் நீங்கள் செய்தது சரிதான் என்று கூறி, அந்தக் கொலையில் இருந்து மனைவியையும் மகளையும் எப்படி விடுவிப்பது என்று யோசித்து முடிவில் தான் பார்த்த புத்திசாலித்தனமான படங்களின் ஐடியாக்கள் மூலம் தனது குடும்பத்தைக் காவல் துறையிடம் இருந்து காப்பாற்றுகிறார்.

பாலச்சந்தரை வியக்க வைத்த படம்
மறைந்த தமிழின் இயக்குநர் சிகரம் பாலச்சந்தர் அவர்கள் இந்த படத்தைப் பாராட்டி தன் கைப்பட ஒரு கடிதம் எழுதி படத்தின் இயக்குநர் ஜீது ஜோசப்பிற்கு அனுப்பி இருந்தார்.

தமிழில் பாபநாசம்
தமிழில் திரிஷ்யம் படத்திற்கு பாபநாசம் எனப் பெயரிட்டுள்ளனர். கமல் - கவுதமி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கிறது படம், இந்தப் படத்தில் சுயம்புலிங்கம் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார் கமல். மலையாளத்தில் போலீஸ் உயரதிகாரியாக நடித்த ஆஷா சரத் தமிழிலும் அதே வேடத்தில் நடிக்கிறார், ஆஷாவின் கணவர் ஆனந்த் மாகாதேவன், கலாபவன் மணி, பேருந்து நடத்துனர் வேடத்தில் சார்லி ஆகியோர் பாபநாசத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரீதேவிக்கு விட்டுக் கொடுக்காத கவுதமி
தமிழ் பாபநாசத்தில் போலீஸ் அதிகாரியாக நடிப்பதற்கு முதலில் நடிகை ஸ்ரீதேவியை படக்குழு கேட்டதற்கு , போலீஸ் உடை எனக்கு பொருத்தமாக இருக்காது கவுதமி விட்டுத்தந்தால் கமலின் மனைவியாக நடிக்கிறேன் என்று கூறினாராம்.கவுதமி விட்டுக் கொடுக்காததால் மயிலுவின் ஆசை நிராசையாகி விட்டது.

தொட்டுத் தொடரும் வில்லன்
மலையாளத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்த ரோஷன் பஷீர் தமிழ் பாபநாசத்திலும் அதே வேடத்தில் நடித்திருக்கிறார்.

எல்லா மொழிகளிலும் மகளாக நடித்த எஸ்தர்
மலையாள திரிஷ்யம் தொடங்கி கன்னடம், தெலுங்கு, தமிழ் என எல்லா மொழிகளிலும், ரீமேக்கான படத்தில் நடிகர்களின் இரண்டாவது மகளாக நடித்திருக்கிறார் எஸ்தர் அஞ்சு.

நெல்லையைக் களத்தில் கொண்டு
மண்மணம் மாறாமல் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தி உள்ளனர். அதே கதையில் ஒரு மாற்றம் வேண்டும் என்பதற்காக நெல்லைத் தமிழ் பேசி, வேட்டி கட்டியதுடன் "சுயம்புலிங்கம்" என்ற பாத்திரமாகவே மாறி படத்தில் நடித்திருக்கிறார் உலக நாயகன்.

பாபநாசத்தால் மருத்துவமனைக்கு சென்ற கமல்
பாபநாசம் படத்தில் கலாபவன் மணி கமலை அடிப்பது போன்று ஒரு காட்சியை எடுத்தபோது, காட்சிக்காக மூக்கின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரப்பர் டியூப் கமலின் தொண்டைப் பகுதிக்கு சென்று விட இதனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டாராம் கமல்.

கமல் – கவுதமி இடையே நிகழ்ந்த “கெமிஸ்ட்ரி”
பாபநாசம் படத்தில் கமலுக்கு ஏற்றவாறு சில காட்சிகளை அதிகப்படுத்தி உள்ளனராம். அதிலும் மலையாள திரிஷ்யத்தை விட தமிழ் பாபநாசத்தில் கமல் - கவுதமிக்கு இடையேயான காட்சிகள் அதிகம் வைக்கப் பட்டுள்ளது. படபிடிப்புத் தளத்தில் இருவரின் கெமிஸ்டிரியைப் பார்த்த படபிடிப்புக் குழுவினர் இந்த வயதிலும் இப்படி ஒரு கெமிஸ்ட்ரியா என்று அசந்து போய்விட்டனராம்.

நீண்ட வருடங்கள் கழித்து
பல வருடங்கள் கழித்து உலகநாயகன் மீண்டும் குடும்ப நாயகனாக மாறி இரண்டு பெண் குழந்தைகளுக்கு அப்பாவாக பாபநாசத்தில் நடித்திருக்கிறார். படத்தின் டிரைலர் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறவில்லை, எனினும் படத்திற்காவது மக்களிடம் வரவேற்பு இருக்கிறதா என்று பார்க்கலாம்.

பாபநாசம் மீது பாய்ந்த வழக்கு
சதீஷ் பால் என்பவர் திரிஷ்யம் படம் தான் எழுதிய "மழக்காலத்து" நாவலை ஒத்திருக்கிறது, அதனால் அதன் தமிழ் பதிப்பான பாபநாசம் படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பை தயாரிப்பாளருக்கு சாதகமாக வழங்க பாபநாசம் மீதான தடை முற்றிலும் நீங்கியது.

பாபநாசத்துக்கு போட்டியாகும் இந்தி திரிஷ்யம்
இந்தியில் அஜய் தேவ்கன்- ஸ்ரேயா நடிப்பில் திரிஷ்யம் படம் ரீமேக்காக உருவாகியுள்ளது, தமிழில் பாபநாசம் திரைப்படம் திரையிடப்படும் நேரத்தில் இந்தி திரிஷ்யமும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் இந்தி திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால், இந்தி திரிஷ்யம் வெளிவந்தால் பாபநாசம் படத்திற்கு அந்தப் படம் கடும் போட்டியாக மாறலாம்.

ரம்ஜான் போட்டியில் இருந்து பின்வாங்கிய பாபநாசம்
பல அதிரடித் திருப்பங்களுடன் திரில்லர் கலந்து எடுக்கப்பட்டுள்ள பாபநாசம் முதலில் ரம்ஜான் தினத்தன்று வெளியாகிறது என்று படக்குழுவினர் சார்பில் கூறப்பட்டது, தற்போது ஜூலை 3 ல் படம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இசைஞானிக்குப் பதில் ஜிப்ரான்
முதலில் இசைஞானி இசையமைக்கிறார் என்று பரபரப்பாக பேச்சு அடிபட்டது, ஆனால் தற்போது நா. முத்துக்குமாரின் பாடல் வரிகளுக்கு இசையமைத்து இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான், வசனம் எழுத்தாளர் ஜெயமோகன்.


Click it and Unblock the Notifications











