தூங்கா வனத்தை ஜூலையில் முடிக்கத் திட்டமிடும் கமல் – பம்பரமாய்ச் சுழலும் படக்குழுவினர்
சென்னை: உலக நாயகன் கமல் நடிப்பில் இன்று திரைக்கு வரும் பாபநாசம் திரைப்படத்தைத் தொடர்ந்து, தற்போது நடித்துக் கொண்டிருக்கும் தூங்கா வனம் படத்தின் படப்பிடிப்பை இந்த மாதமே முடிக்கத் திட்டமிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் தூங்காவனம் படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே பாதி முடிந்து விட்டது, மீதிப் படத்தையும் இந்த மாதத்திற்குள் முடிக்கத் திட்டமிட்ட கமல் தற்போது அதற்காக முழு மூச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறாராம்.

கமலின் உதவியாளர் ராஜேஷ் என் செல்வா இயக்கும் இந்தப் படம் ஸ்லீப்லெஸ் என்ற ஆங்கிலத் திரைப்படத்தின் ரீமேக் என்று கூறுகின்றனர், இந்த மாதம் ஷூட்டிங்கை முடித்து தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் படத்தை டிசம்பர் மாதம் திரைக்குக் கொண்டுவரத் திட்டமிட்டு இருக்கின்றனர் படக்குழுவினர்.
தூங்கா வனம் படத்தில் போலீஸ் ஆபிசராக நடிக்கும் கமல், ஒரு இரவில் ஸ்டைலான திரில்லராக மாறுவது போன்ற கதையாம். இதில் கமலின் பார்ட்னராக பிரகாஷ் ராஜ் நடித்திருக்கிறாராம்.

படத்தில் நடிகை த்ரிஷாவும் போலீஸ் வேடத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது, பாபநாசம் திரைப்படத்தில் நடித்த ஆஷா சரத், உமா ரியாஸ்கான் மற்றும் கிஷோர் ஆகியோர் முக்கியமான வேடங்களில் படத்தில் நடிக்கின்றனர்.
உத்தம வில்லன், பாபநாசம் படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசையமைக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.


Click it and Unblock the Notifications











