ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம்! - கமல்ஹாசன்
சென்னை: ரசிகர்களின் அன்புதான் என் ஆணிவேர், அச்சாணி, பலம். இந்த பலம் இருக்கும்வரை நான் தொடர்ந்து புதிய முயற்சிகளை மேற்கொள்வேன், என்றார் கமல்ஹாஸன்.
கமல்ஹாசன் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்துள்ள விஸ்வரூபம்' படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று ஒரே நாளில் மதுரை, கோவை மற்றும் சென்னையில் நடந்தது.

மதுரையில்...
இதற்காக கமல்ஹாசனும், படக்குழுவினரும் சென்னையில் இருந்து ஹெலிகாப்டரில் முதலில் மதுரைக்கு சென்றார்கள். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரி மைதானத்தில் காலை 10-30 மணிக்கு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய நற்பணி மன்றத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பத்ரிநாத் பெற்றுக்கொண்டார்.

கோவையில்...
மதுரை விழா முடிந்ததும் கமல்ஹாசனும், படக்குழுவினரும் ஹெலிகாப்டர் மூலம் கோவை சென்றார்கள். மாலை 3 மணிக்கு கோவையில் உள்ள இந்துஸ்தான் கலை-அறிவியல் கல்லூரி மைதானத்தில், பாடல் வெளியீட்டு விழா நடந்தது.பாடல்களை கமல்ஹாசன் வெளியிட, அவருடைய ரசிகைகள் இரண்டு பேர் பெற்றுக் கொண்டார்கள்.

சென்னையில் பிரமாண்டம்
கோவை விழாவை முடித்துக்கொண்டு கமல்ஹாசனும், படக்குழுவினரும் அதே ஹெலிகாப்டரில் சென்னைக்கு வந்தார்கள். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இரவு 8 மணிக்கு விழா தொடங்கியது.
கமல்ஹாசன், ஆன்ட்ரியா, பூஜாகுமார் ஆகிய மூவரும் மேடையில் தோன்றினார்கள். மைதானம் முழுவதும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தார்கள்.

அண்ணன் இளையராஜா
கமல் பேசுகையில், "இது பொங்கலா, தீபாவளியா என்று தெரியவில்லை. இங்கே வந்திருக்கும் என் மூத்த சகோதரர்-அண்ணன் இளையராஜாவுக்கு நன்றி. என்மீதான் அன்பு மட்டுமே அவரை இங்கே வரவைத்திருக்கிறது. இந்தப் பெருமையைத் தந்த அவருக்கு நன்றி. நீங்கள் (ரசிகர்கள்) சந்தோஷப்படுகிற மாதிரி ‘விஸ்வரூபம்' படத்தை எடுத்து இருக்கிறேன்.

ரசிகர்களின் சந்தோஷமே என் சந்தோஷம்...
ரசிகர்களின் கரகோஷம்தான் எனக்கு சந்தோஷம். எவ்வளவு கரகோஷம் எழுந்தாலும், இன்னும் வேண்டும் வேண்டும் என்ற பேராசை ஏற்படும். அதற்கான அருகதை இருக்கிறதா? என்று கூட யோசிப்பதில்லை.
மதுரையிலும், கோவையிலும் நடந்த விழாக்களில், அங்குள்ள சகோதரர்கள் தூள் கிளப்பி விட்டார்கள். அவர்களுக்கு நன்றி. எல்லோரும் என் மீது காட்டும் அன்பை பார்க்கும்போது, இவர்களுக்காக இன்னும் என்ன செய்ய வேண்டும்? என்ற ஆர்வமும், பயமும் வருகிறது.

நீங்கள்தான் ஆணிவேர்–அச்சாணி
என்னை குழந்தையாக பார்த்தவர்களும் இருக்கிறார்கள். வளர்ந்தபின் பார்த்தவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அத்தனை பேரும் என் மீது அளவு கடந்த அன்பு செலுத்துகிறார்கள். அந்த அன்புதான் என் ஆணிவேர்-அச்சாணி என நினைக்கிறேன். நான் கழன்றுவிடாத சக்கரமாக சுழன்று கொண்டிருக்கிறேன்,'' என்றார்.


Click it and Unblock the Notifications











