விஸ்வரூபம் 2 படத்தை ஆஸ்கர் ரவியிடமிருந்து திரும்பப் பெறும் கமல்!
விஸ்வரூபம் 2 படத்தை ரசிகர்கள் கிட்டத்தட்ட மறந்தே போய்விட்டார்கள். கமலும் அதைப் பற்றிப் பேசுவதில்லை, அதன் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனும் கண்டு கொள்வதில்லை.
‘விஸ்வரூபம்' படம் எடுக்கும்போதே, அந்த படத்தின் 2-ம் பாகத்தின் பெரும்பாலான காட்சிகளை கமல் எடுத்துவிட்டார். இதையடுத்து ‘விஸ்வரூபம்-2' படத்தின் உரிமையை கமலிடம் இருந்து ஆஸ்கர் ரவிச்சந்திரன் வாங்கினார்.

நெருக்கடி
இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், ஆஸ்கர் ரவிச்சந்திரனுக்கு ஏற்பட்ட பண நெருக்கடி காரணமாக ‘விஸ்வரூபம் -2' படம் வெளியிடப்படுவது நிறுத்தப்பட்டது. இன்னும் 10 சதவீத ஷூட்டிங் பாக்கியுள்ளதாம்.

வெளி வருமா?
தற்போது, ஆஸ்கர் ரவிச்சந்திரனின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதால், ‘விஸ்வரூபம் 2' வெளிவருமா என்ற நிலை வந்துவிட்டது. இதுபற்றிக் கேட்டபோது, படத்தை யாரிடமாவது கைமாற்றும் மனநிலையில் இருப்பதாக ஆஸ்கர் ரவி கூறியிருந்தார்.

கமல் புதிய முடிவு
இந்நிலையில், விஸ்வரூபம் 2- பிரச்சினையில் கமல் புதிய முடிவை மேற்கொண்டுள்ளார். அது, ஆஸ்கர் ரவிச்சந்திரனிடமிருந்து ‘விஸ்வரூபம் 2' படத்தின் உரிமையை திரும்பப் பெற்று, அதை தனது ராஜ்கமல் நிறுவனம் மூலமே வெளியிடத் திட்டமிட்டுள்ளாராம்.

பாபநாசத்துக்குப் பிறகு
ஏற்கெனவே, கமல் விஸ்வரூபம் படத்தை தனது சொந்த நிறுவனம் மூலம்தான் வெளியிட்டார். பாபநாசம் படம் வெளியான கையோடு விஸ்வரூபம் 2-ஐ வெளியிடப் போகிறாராம்.


Click it and Unblock the Notifications











