விஸ்வரூபம் 2 படத்தில் தண்ணீருக்கு அடியில் சண்டைக்காட்சி - கமல் தகவல்

கமலின் விஸ்வரூபம் 2 படத்தை வெளியிடும் வேலைகளில் மும்முரமாகிவிட்டார் கமல்ஹாஸன்.
இதன் முதல் பகுதி கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இப்படத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதையடுத்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கிவிட்டு வெளியிட்டனர்.
'விஸ்வரூபம் 2' படத்தில் கமலுடன் பூஜாகுமார், ஆண்ட்ரியா, ராகுல்போஸ், சேகர் கபூர், நாசர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். கமல் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார்.
படத்தை கமல்ஹாஸனின் ராஜ்கமல் நிறுவனத்துடன், ஆஸ்கர் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கிறார்.
தாய்லாந்து, பாங்காக்கில் இதன் பெரும் பகுதி படப்பிடிப்பு நடந்து முடிந்துவிட்டது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் 'விஸ்வரூபம் 2' படத்தின் டிரைலர் மற்றும் போஸ்டர்களை கமல் வெளியிட்டார். இந்த டிரைலருக்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விஸ்வரூபம் படத்தின் டிரைலரும் இந்த விழாவில் தான் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், படத்தின் சிறப்பம்சம் குறித்து சமீபத்தில் கமல் கூறுகையில், "விஸ்வரூபம் படத்தை உருவாகும் போதே, இரண்டாம் பாகம் பற்றி சிந்தித்தேன். விஸ்வரூபம் 2 படத்திற்கான 90 சதவீத படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இருக்கிறோம். தண்ணீருக்கு அடியில் வைத்து எடுக்கப்பட்ட சண்டைகாட்சிகள் நிச்சயம் பெரிதாகப் பேசப்படும். மனித உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து இரண்டாம் பாகத்தை உருவாக்கி இருக்கிறேன்," என்றார்.


Click it and Unblock the Notifications











