கமல் ஹாஸன் இப்போ சர்ச்சை ஹாஸன்... ஆமா, என்னதான் சொல்ல வர்றார்?
சென்னை: தமிழகத்தில் ஆட்சியிலும், ஆளும் கட்சியிலும் ஏக பரபரப்பு நிலவும் சூழலில், தன் பங்குக்கு நடிகர் கமல் ஹாஸனும் ட்விட்டர் மூலம் சர்ச்சைகள் கிளப்பியுள்ளார்.
முதல் ட்வீட்டில், 'சில வருடங்களுக்கு முன்னர் விஸ்வரூபம் படம் பல சிக்கல்களுடன் வெளியாகியது. மக்கள் கொடுங்கோன்மைக்கு எதிராக நின்று எனக்கு ஆதரவாக நின்றனர்,' என்று குறிப்பிட்டுள்ளார்.

விஸ்வரூபம் பட வெளியீட்டுக்கு அன்றைய முதல்வர் ஜெயலலிதா திடீரென தடை விதித்தார். காரணம், மத ரீதியாக இந்தப் படம் பிரச்சினைகளைக் கிளப்பும்... எல்லா தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு தரமுடியாது என்று கூறினார் ஜெயலலிதா. இதனால், நாட்டை விட்டே வெளியேறப் போவதாகவெல்லாம் கமல் ஹாஸன் கூறியது நினைவிருக்கலாம்.
மற்றொரு ட்வீட்டில், 'தமிழகமே உறங்கச் செல்லுங்கள். நாளை உங்களுக்கு முன்னதாக அவர்கள் எழுந்து விடுவார்கள்', என பதிவு செய்துள்ளார்.
ஆனால் முதல் ட்வீட்டில் மறைந்த முதல்வர் குறித்து கடுமையான வார்த்தைகளை அவர் பயன்படுத்தியுள்ளதாக பலரும் கண்டித்துள்ளனர். 'மக்கள் நலன் சார்ந்து ஜெயலலிதா அன்று முடிவு எடுத்தார். கமல் படத்துக்கு எதிரான நடவடிக்கை என்றால் அதை கொடுங்கோன்மை என்பாரா? ஏன் அதே ஜெயலலிதாதானே மீண்டும் பெரும் வெற்றிப் பெற்று முதல்வராக வந்தார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.
அடுத்த ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பலரும், 'என்ன சொல்கிறோம், எதுகுறித்துச் சொல்கிறோம் என தெளிவாக சொல்லுங்கள் சார். இருக்கிற குழப்பத்தில் நீங்க வேற...' என்று கமெண்ட் அடித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











