விஸ்வரூபத்திற்கு ரூ.1,000 கொடுத்து படம் பார்க்கையில் கரண்ட் போச்சுனா?

கமல் ஹாசனின் விஸ்ரூபம் படம் தியேட்டர்களில் ரிலீஸாகும் 8 மணிநேரத்திற்கு முன்பு டிடிஎச்சில் ரிலீஸ் செய்யப்படும் என்று படத்தின் நாயகன் கமல் ஹாசன் அறிவித்துள்ளார்.
பல்வேறு நிறுவனங்கள் விஸ்வரூபத்தை ஒளிபரப்ப ஆர்வம் காட்டியபோதும் ஏர்டெல் நிறுவனம் படத்தின் டிடிஎச் உரிமையைப் பெற்றுள்ளது. இதனால் வீடுகளில் ஏர்டெல் டி.டி.எச் வைத்திருப்பவர்கள் விஸ்வரூபம் திரைப்படத்தை தியேட்டர்களில் ரிலீசாவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பே தங்கள் வீடுகளில் உள்ள டி.விக்களில் காண முடியும். ஏர்டெல் டி.டி.எச். சேவையில் விஸ்வரூபம் சினிமா பார்ப்பதற்காக சந்தாதாரர்கள் ரூ.1,000 கட்டணம் செலுத்த வேண்டும். கட்டணம் செலுத்தியவர்களுக்கு மட்டுமே விஸ்வரூபம் படம் ஒளிபரப்பு இணைப்பு கிடைக்கும்.
இப்பொழுது தமிழக ரசிகர்களுக்கு ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. மாநிலத்தில் 12 மணிநேரத்திற்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில் ரூ.1,000 கட்டி படத்தைப் பார்த்துக் கொண்டிருக்கையில் மின்தடை ஏற்பட்டுவிட்டால் படம் அவ்வளவு தானா என்று அவர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. 2 மணிநேரத்திற்கு மேல் ஓடும் படத்தை தமிழக ரசிகர்களால் நிச்சயம் தொடர்ந்து பார்க்க முடியாது. ஏனென்றால் ஒரு மணிநேரம் மின்சாரம் இருந்தால் அடுத்த ஒரு மணிநேரம் இருக்காது.
கமல் சார் இந்த சந்தேகத்தை நீங்கள் தான் தீர்த்து வைக்க வேண்டும். மின்தடையில்லா நேரத்தில் படத்தை வெளியிட நினைத்தால் அது நடக்காத காரியம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











