பொதுக்கூட்டங்களில் தேவையில்லாமல் வரும் ஆம்புலன்ஸ்...அரசியல் பேசிய கமல்
சென்னை : தமிழக சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் படுதோல்வி, கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பங்கள் ஆகிவற்றிற்கு பிறகு கமல் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். வரிசையாக பல படங்களில் நடித்தாலும், பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க ஓகே சொன்னார்.
கடந்த நான்கு சீசன்களை போல், ஐந்தாவது சீசனையும் கமலே தொகுத்து வழங்கி வருகிறார். இதனால் அரசியல் சார்ந்த கமல் ஏதாவது பேசுவார் என கவனிக்கப்பட்டு வருகிறது. ஆனால் நிகழ்ச்சி துவக்க விழாவின் போதோ, கடந்த வார இறுதியில் வந்த எபிசோட்டிலோ பெரிதாக அரசியல் சார்ந்து கமல் எதையும் பேசவில்லை.

உதவி செய்வதை நிறுத்த மாட்டேன்
இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் போட்டியாளர்களின் கதை பற்றி கமல் பேசிக் கொண்டிருந்தார். அப்போது பிரியங்காவின் கதை பற்றி பேசுகையில், மற்றவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை என எப்போது அனைவரும் உணர்கிறார்களோ அப்போது தான் நமது சமூகம் மாறும். எத்தனை சிக்கல் வந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவுவதை நான் ஒரு போதும் நிறுத்தியதில்லை. நிறுத்த வேண்டும் என நினைத்தது கூட இல்லை.

செல்ஃபி எடுக்கும் மோசம்
சாலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் கிடப்பவருக்கு உதவினால் சாட்சி சொல்ல வர வேண்டி வருமே என பலர் கண்டுகொள்ளமல் போகின்றனர். இன்னும் சிலர் அடிபட்டு கிடப்பவரின் அருகில் சென்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருப்பார்கள். அதை பார்க்கும் போது, அதே நிலை உனக்கும் வரட்டும் என சபிக்க தோன்றும். ஆனால் அப்படி செய்தால் செல்ஃபி எடுத்ததை விட அது மோசமாகி விடும்.

தேவையில்லாமல் வரும் ஆம்புலன்ஸ்
நான் பொதுக் கூட்டங்களில் பேசிக் கொண்டிருக்கும் போது ஆம்புலன்ஸ்கள் கடந்து சென்றால் வழி விட சொல்லுவேன். ஒரு உயிரை விட அரசியல் முக்கியமில்லை. அரசியலால் பல உயிர்கள் போய் கொண்டிருக்கிறது. இதில் நாமும் நமது பங்கிற்கு அதை செய்ய வேண்டாம் என்று தான். அதற்கு பெயர் அரசியலும் இல்லை. அந்த ஆம்புலன்சில் உங்கள் அப்பா மாதிரி, என் அம்மா மாதிரி பல பேர் ஹார்ட் அட்டாக்கில் போய் கொண்டிருப்பார்கள்.

அரசியல் பேசிய கமல்
பல சமயங்களில் ஆளே இல்லாமல், தேவையில்லாமல் பல ஆம்புலன்ஸ் கூட்டத்திற்கு இடையே கடந்து செல்லும். அது வேறு விதமான அரசியல் என தனது அரசியல் கூட்டங்களுக்கு வரும் இடையூறுகளை மறைமுகமாக தெரிவித்தார். இந்த சீசனில் கமல் பேசிய முதல் அரசியல் சார்ந்த பேச்சு இதுவாகும். கமலின் பேச்சு அவரது சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி, அரசியல் தொண்டர்களையும் ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











