கனா கண்டேன்... தமிழ் மொழி பற்றிய உலகப் பாடல்...நாளை நாட்படுத் தேறலில்
சென்னை : கவிஞர் வைரமுத்துவின் நாட்படு தேறலில் இரண்டாம் பாகத்தில் கனா கண்டேன் என்ற தலைப்பில் அடுத்த பாடல் மே 15 ம் தேதியான நாளை வெளியிடப்பட உள்ளது. இந்த வித்தியாசமான பாடல் ரசிகர்களால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் 7500 பாடல்கள் எழுதிய கவிப்பேரரசு வைரமுத்து, தனது புதிய முயற்சியாக நாட்படு தேறல் என்ற தலைப்பில் பாடல்கள் எழுதி வருகிறார். தனது வரிகளில் 100 பாடல், 100 இசையமைப்பாளர்கள், 100 பாடகர்கள், 100 டைரக்டர்கள் என நாட்படுதேறல் பாடல் தொகுப்பு வெளியிடப்பட்டு வருகிறது. இதன் முதல் பாகம் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.

கனா கண்டேன் பாடல்
இந்நிலையில் தற்போது நாட்படு தேறலின் இரண்டாம் பாகம் வெளியாகி வருகிறது. இதில் 4 பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், ஐந்தாவது பாடல் கனா கண்டேன் என்ற தலைப்பில் மே 15 ம் தேதியான நாளை வெளியிடப்பட உள்ளது. இசையருவி சேனலில் பகல் 1.30 மணிக்கும், கலைஞர் டிவியில் மாலை 5.30 மணிக்கும் இந்த பாடல் வெளியிடப்பட உள்ளது.

கண்ணன் கனவு காண்கிறாரா
கனா கண்டேன் பாடலின் முன்னோட்ட வீடியோவை வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த பாடல், தமிழையும், தமிழ் இசையையும் அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் பாடல் என கூறப்படுகிறது. ஆண்டாளை திருமணம் செய்து கொள்வதாக கண்ணன் கனா காண்பது போன்று இந்த பாடல் அமைக்கப்பட்டுள்ளது.

பாடல் டீமுடன் வைரமுத்து
வைரமுத்து தனது மற்றொரு ட்விட்டர் பதிவில், நாட்படு தேறலில் ஒரு பாடலின் படப்பிடிப்பு. விஜிபி தங்க கடற்கரை சென்றிருந்தேன். தமிழ் மொழி குறித்த உலகப் பாடல் அது. வித்தியாசாகர் இசையமைத்தது. உடன் இயக்குனர் இ.வி.கணேஷ்பாபு, ஒளிப்பதிவாளர் ராஜராஜன், நடன இயக்குனர் ஸ்ரீதர், நடிகர் விஜய் விஷ்வா, நடிகை சிருஷ்டி டாங்கே என குறிப்பிட்டு அனைவருடனும் எடுத்துக் கொண்ட போட்டோ ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்தை மிஞ்சும்
வைரமுத்துவின் இந்த முயற்சிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. ஏராளமானோர் தங்களின் ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்த பாடல் தமிழ்த்தாய் வாழ்த்தையே மிஞ்சும் அளவிற்கு இருக்க போகிறது என சிலர் கமெண்ட் செய்துள்ளனர். இந்த பாடல் டீமுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











