மகாத்மா காந்தி மீது விமர்சனம்...மீண்டும் சர்ச்சையில் சிக்கிய கங்கனா
மும்பை : தலைவி படத்தின் வெற்றியை தொடர்ந்து தேஜாஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார் கங்கனா ரணாவத். படங்களில் பிஸியாக இருப்பதுடன் சோஷியல் மீடியாவிலும் பிஸியாக இருந்து வருகிறார் கங்கனா ரணாவத்.
பாலிவுட்டில் தைரியமான நடிகை என பெயர் வாங்கிய கங்கனா, மணிகர்னிகா படத்தில் ராணி லட்சுமி பாயாக நடித்தார். இந்த படம் பாராட்டுக்களையும், விமர்சனங்களையும் பெற்றது. தொடர்ந்து தற்போது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வாழ்க்கை படத்தை தானே தயாரித்து, நடிக்கும் முயற்சியில் இறங்கி உள்ளார் கங்கனா.

சர்ச்சை பேச்சு
நடிகை, தயாரிப்பாளர், இயக்குனர் என பல முகங்களைக் கொண்ட கங்கனாவிற்கு சமீபத்தில் கலை துறைக்கான பத்மஸ்ரீ விருது வழங்கி கெளரவித்தது மத்திய அரசு. இதற்கு பலரும் அவருக்கு பாராட்டு தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இந்திய சுதந்திரம் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து, சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளார் கங்கனா.

இந்திய சுதந்திரம்
அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்ததால் கங்கனாவின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டது. இதனால் இன்ஸ்டாகிராமில் கணக்கை துவங்கி, அதில் கருத்து பதிவிட்டு வருகிறார் கங்கனா. இந்நிலையில், 1947 ல் நாம் பெற்றது பிச்சை. 2014 ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு அமைந்த போது தான் நாம் உண்மையான சுதந்திரத்தை பெற்றோம் என கூறி இருந்தார்.

விருதை திருப்பி தருகிறேன்
கங்கனாவின் இந்த கருத்திற்கு பாலிவுட் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், சாமானிய மக்கள் என பலரும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். ஆனால் தனது பேச்சை நியாயப்படுத்தி, 1947 ல் என்ன சுதந்திர போர் நடந்தது. சுபாஷ் சந்திரபோஸ், பகத் சிங்கிற்கு ஏன் மகாத்மா காந்தி ஆதரவு அளிக்கவில்லை. தான் கூறியதில் ஏதாவது தவறு இருந்தால், பத்மஸ்ரீ விருதை திருப்பித்தர தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

காந்தி பற்றி சர்ச்சை கருத்து
இதனால் பாலிவுட்டே பரபரப்பான நிலையில், மகாத்மா காந்தி வாங்கி தந்தது பிச்சை தான். சுபாஷ் சந்திரபோசா, மகாத்மா காந்தியா யார் உங்களின் ஹீரோ என்பதை தேர்வு செய்யுங்கள். பிறகு முடிவு செய்யுங்கள் என தெரிவித்துள்ளார்.மகாத்மா காந்தியை குறிவைத்து கங்கனா பேசிய இந்த கருத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

போலீசில் புகார்
கங்கனாவிற்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போலீசில் புகார் அளித்துள்ளன. ஏற்கனவே கங்கனாவிற்கு எதிராக பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் , தற்போது மேலும் ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications











