அதுக்காகவே சொத்துகளை அடமானம் வச்சு படம் எடுத்தேன்... கங்கனா ரணாவத் அதிரடி
மும்பை: 2006ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் கங்கனா ரணாவத்.
தமிழில் தாம்தூம், தலைவி படங்களில் நடித்துள்ள கங்கனா, தற்போது சந்திரமுகி இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இந்தியில் எமர்ஜென்சி என்ற படத்தை இயக்கி தயாரித்துள்ள கங்கனா, அதில் இந்திரா காந்தி கேரக்டரில் நடித்துள்ளார்.
எமர்ஜென்ஸி திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அது உருவான விதம் குறித்து கங்கனா ரணாவத் மனம் திறந்துள்ளார்.

கங்கனா ரணாவத்
இந்தியில் 2006ம் ஆண்டு ரிலீஸான கேங்ஸ்டர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் கங்கனா ரணாவத். தொடர்ந்து ஷக்கலக்க பூம் பூம், லைஃப் இன் ஏ மெட்ரோ, ஃபேஷன், ஏக் நிரஞ்சன், ஒன்ஸ் அப்பான் ஏ டைம் இன் மும்பை, தனு வெட்ஸ் மனு உட்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். அதேபோல் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம்தூம் படத்தில் நாயகியாக நடித்த கங்கனா, தலைவி படத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்து மாஸ் காட்டியிருந்தார்.

திரைப்படமான இந்திய எமர்ஜென்ஸி
ஜெயலலிதாவின் பயோபிக் திரைப்படமான தலைவி கங்கனா ரணாவத்துக்கு சிறப்பான அங்கீகாரத்தை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து எமர்ஜென்ஸ் என்ற இந்தி படத்தில், இந்தியாவின் இரும்பு பெண்மணி என்றழைக்கப்படும் இந்திரா காந்தியின் பாத்திரத்தில் நடித்துள்ளார். 1977ம் ஆண்டு இந்தியாவில் எமர்ஜென்ஸி பீரியடை அமல்படுத்தினார் இந்திரா காந்தி. இந்த காலக்கட்டம் இந்திய அரசியலில் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. இதன் பின்னணியில் உருவாகியுள்ள படம் தான் எமர்ஜென்ஸி.

மனம் திறந்த கங்கனா
இந்தப் படத்தில் இந்திரா காந்தியாக நடித்துள்ள கங்கனா ரணாவத்தின் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது. அச்சு அசலாக அப்படியே இந்திரா காந்தியை பார்த்தது போலவே இருந்தது. எமர்ஜென்ஸி படத்தில் இந்திரா காந்தியாக நடித்தது மட்டும் இல்லாமல், இயக்குநர், தயாரிப்பாளர் என கூடுதலாகவும் பொறுப்பை சுமந்துள்ளார். தலைவியை தொடர்ந்து எமர்ஜென்ஸி படத்துக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில், இந்தப் படம் குறித்து கங்கனா ரணாவத் மனம் திறந்துள்ளார்.

சொத்துகள் அடமானம்
அதில், "எமர்ஜென்சி படப்பிடிப்பை முடித்து விட்டேன். எனது வாழ்க்கையின் பெருமையான தருணம் இது. ஆனாலும் படத்தை சுகமாக முடிக்கவில்லை. ஷூட்டிங் ஆரம்பமான போது எனக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. அதன்பிறகு படத்தை முடிக்க எனது அனைத்து சொத்துகளையும் அடமானம் வைத்தேன். இது எனக்கு மறுபிறவி மாதிரி. சொத்தை அடமானம் வைத்ததை வெளியே சொல்லவில்லை. முன்பே சொல்லி இருந்தால் சிலர் எனது நிலையை பார்த்து கவலைப்பட்டு இருப்பார்கள்" எனக் கூறியுள்ளார்.

கடினமாக உழைக்க வேண்டும்
மேலும், "நான் விழுவதை பார்க்க ஆசைப்படுபவர்களுக்கும், நான் கஷ்டப்பட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் எனது வலி மூலம் கிடைக்கும் சந்தோஷத்தை கொடுக்க நான் விரும்பவில்லை. நான் சொல்வது என்னவென்றால் உங்கள் கனவுகள் நிறைவேற கடினமாக உழைக்க வேண்டும். நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதை என்மீது அக்கறை கொண்டவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார். கங்கனாவின் இந்த பேச்ச் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











