3 வீடுகள் இணைப்பு.. கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறினார் கங்கனா.. மும்பை நீதிமன்றம்!
மும்பை: நடிகை கங்கனா ரனாவத், கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பிரபல இந்தி நடிகை கங்கனா ரனாவத். இவர் தமிழில் தாம் தூம் படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்தவர்.
இப்போது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதையான 'தலைவி' படத்தில் நடிக்கிறார்.

அரவிந்த்சாமி
விஜய் இயக்கும் இந்தப் படத்தில் எம்.ஜி.ஆர். ஆக, அரவிந்த்சாமி, அவர் மனைவி ஜானகி ராமச்சந்திரனாக மதுபாலா நடிக்கின்றனர். ரோஜா படத்துக்கு பிறகு மதுபாலாவும் அரவிந்த் சாமியும் இதில் இணைந்துள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார்.

ஒன்றாக இணைக்கும்
அடிக்கடி சமூக வலைதளங்களில் கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குவார் நடிகை கங்கனா. இவருக்கு மும்பை கர் பகுதியில் உள்ள 16 மாடி கொண்ட அபார்ட்மென்ட் ஒன்றில் ஐந்தாவது மாடியில் மூன்று வீடுகள் உள்ளன. இந்த வீடுகளை ஒன்றாக இணைக்கும் பணிகளை சில வருடத்துக்கு முன் ஆரம்பித்தார்.

மும்பை மாநகராட்சி
இதில் சட்டவிரோதமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக மும்பை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இதை ரத்து செய்யக்கோரி கங்கனா மும்பை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது கடந்த வாரம் விசாரணை நடத்திய நீதிபதி எல்.எஸ்.சவான், அவர் மனுவை தள்ளுபடி செய்தார்.

கடுமையாக மீறினார்
நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருக்கும் விவரம் இப்போது தெரிய வந்துள்ளது. அதாவது, நடிகை கங்கனா தனது 3 வீடுகளையும் ஒன்றாக இணைப்பதற்காக கட்டுமான திட்ட அனுமதியை கடுமையாக மீறி உள்ளார் என்று கூறப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய 6 வாரம் காலஅவகாசம் வழங்கி சிவில் கோர்ட் உத்தரவிட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications











