கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம்.. ஜனாதிபதி வரை மிரளவிட்ட பிரபல பாடகி முடிவு!
சென்னை: கொரோனாவில் இருந்து குணமாகியிருக்கும் பிரபல பாடகி கனிகா கபூர், பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் செய்ய முடிவு செய்திருக்கிறார்.
Recommended Video
பிரபல பாலிவுட் பாடகியான கனிகா கபூர், லண்டனில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த அவர், விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையை புறக்கணித்தார்.
தொடர்ந்து மார்ச் 11 ஆம் தேதி விமானம் மூலம் மும்பையில் இருந்து லக்னோவுக்கு சென்றார். மார்ச் 15ஆம் தேதி லக்னோவில் அரசியல் தலைவர்கள் பலர் கலந்துகொண்ட பார்ட்டியில் பங்கேற்றார் கனிகா கபூர்.

கொரோனா தொற்று
பார்ட்டி நடந்து முடிந்த மறுநாளே கனிகாவுக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது. இதனால் அந்த பார்ட்டியில் பங்கேற்ற பலருக்கும் கொரோனா தொற்று இருக்கலாம் என அஞ்சப்பட்டு சோதனை நடத்தப்பட்டது.

தொற்று என அச்சம்
பாஜக மூத்த தலைவரான வசுந்தரா ராஜே, அவரது மகனும் எம்.பி.யுமான துஷ்யந்த், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோர் கனிகா கபூருடன் நெருக்கமாக இருந்ததால் அவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்பட்டது.

அனைவருக்கும் பரிசோதனை
அதில் லோக்சபா எம்.பியான துஷ்யந்த் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்ததால் குடியரசுத் தலைவருக்கும் கொரோனா தொற்று ஏற்படலாம் என சந்தேகிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குடியரசுத் தலைவர் உட்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

காற்றில் பறக்கவிட்டு
வெளிநாடு சென்று வருபவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி வரும் நிலையில் அதையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு ஜாலியாக இசை நிகழ்ச்சியில் பங்கேற்ற கனிகா கபூருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

கனிகா டிஸ்சார்ஜ்
இதனை தொடர்ந்து கனிகா கபூர் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கேயும் தன்னை சரியாக கவனிக்கவில்லை என மருத்துவர்களுடன் மல்லுக்கட்டினார். இதனை தொடர்ந்து ஆறாவது சோதனையில் ஒருவழியாக நெகட்டிவானது கொரோனா.இதனால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார் கனிகா.

பிளாஸ்மா தானம்
இந்நிலையில் நாட்டையே பெரும் பீதிக்குள்ளாக்கிய கனிகா, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிளாஸ்மா தானம் வழங்க முன்வந்துள்ளார். லக்னோவில் உள்ள கிங் ஜார்ஜ் மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள் குழு, கனிகாவின் ரத்தத்தை சோதனை செய்த பிறகே அவர் பிளாஸ்மா தானம் செய்ய முடியுமா என சொல்ல முடியும் என கூறியுள்ளனர்.

இன்று அல்லது நாளை
மேலும் அவரது ரத்தத்தை மருத்துவர்கள் சோதனைக்கு எடுத்துள்ளனர். டெஸ்ட்டின் முடிவில் அவர் பிளாஸ்மா திரவம் அளிக்கலாம் என கூறப்பட்டால் இன்று அல்லது நாளை அவரிடம் இருந்து பிளாஸ்மா தானம் பெறலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











