ஆஹா செம...காரைக்குடியில் தயாராகும் தி கிரேட் இந்தியன் கிட்சன்...அதுவும் 2 மொழிகளில்
சென்னை : டைரக்டர் கண்ணன் ஒரே சமயத்தில் 2 மொழிகளில், ரீமேக் படம் ஒன்றை இயக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் சூட்டிங் மார்ச் மாதம் காரைக்குடியில் துவங்க உள்ளது.

இது பற்றி கண்ணன் கூறுகையில், மலையாள படமான தி கிரேட் இந்திய கிட்சன் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்வதற்கான உரிமத்தை நான் பெற்றுள்ளேன். ஒரே நேரத்தில் இரண்டு மொழிகளிலும் இந்த படத்தை டைரக்டர் செய்ய உள்ளேன்.
பலரின் பாராட்டை பெற்ற, மிகவும் வலுவான கதை. இதை தமிழ் ரசிகர்களின் ரசனை, சுவைக்கு ஏற்றது போல் அழகாக வழங்க உள்ளேன். ஒரு குடும்ப தலைவி, மனைவியின் நிலையை, அவர்களின் பங்கை சொல்லும் கதை.
உட்கார்ந்த இடத்தில் இருந்து அவர்களை ஒரு டம்ளர் தண்ணீர் கொண்டு வர சொல்வதென்றால் கூட இரண்டு முறை யோசிக்க வைக்கும் படம். அந்த அளவிற்கு ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இரு மொழிகளிலும் எடுக்கப்படுவதால், தமிழ்-தெலுங்கு சினிமாவில் புகழ்பெற்ற நடிகையாக இருக்க வேண்டும். ஹீரோவும் அனைவரும் அறிந்த தென்னிந்திய நடிகராக இருக்க வேண்டும். இதுவரை யாரையும் முடிவு செய்யவில்லை. விரைவில் அறிவிப்பேன்.
பி.ஜி.முத்தையா ஒளிப்பதிவு, ராஜ்குமார் கலை, பட்டுக்கோட்டை பிரபாகர் வசனம் எழுத உள்ளார் என்றார்.
அதே சமயம், அதர்வா, அனுபமா பரமேஸ்வரன் ஆகியோரை வைத்து கண்ணன் இயக்கி உள்ள தள்ளி போகாதே படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இது பற்றி அவர் கூறுகையில், டப்பிங் வேலைகள் முடிந்து விட்டது. இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. ரிலீசுக்கு சரியான சமயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.


Click it and Unblock the Notifications











